மேற்கு வங்கத்தில்...திரிணாமுல் தொண்டர்களால்... பாஜக அலுவலகம் சூறை...பாஜக பரபர குற்றச்சாட்டு!
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பாஜக தலைவர் சுவேந்து அதிகாரியின் அலுவலகத்தை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் அடித்து நொறுக்கி விட்டதாக பாஜக குற்றம்சாட்டி உள்ளது.
ஆட்சி அதிகாரம் இருப்பதால் அவர்கள் இவ்வாறு செய்கிறார்கள் என பாஜக கூறியுள்ளது.
ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள திரிணாமுல் கட்சி, பாஜக பொய் சொல்வதை வாடிக்கையாக வைத்துள்ளதாக தெரிவித்து உள்ளது.
மேற்கு வங்கம்
பறவை காய்ச்சலை பரப்ப பிரியாணி சாப்பிடுகிறார்கள்.. போராடும் விவசாயிகள் மீது பாஜக தலைவர் புது அட்டாக்
பாஜக துடிப்பு
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. திரிணாமுல் ஆட்சியை தக்க வைக்க முயன்று வருகிறது.பாஜக அங்கு ஆட்சியை கைப்பற்ற துடியாய் துடித்து வருகிறது.
பாஜகவில் இணைந்தார்
இதனால் பாஜக தலைவர்கள் அங்கு தொடர்ந்து படையெடுத்து வருகின்றனர். மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைத்தே தீருவோம் என உறுதியாக உள்ள அமிஷ்ஷா, பல வியூகங்களை வகுத்து வருகிறார்.அதன்பலனாக கட்சியில், மக்களிடத்தில் செல்வாக்கு பெற்று விளங்கிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சுவேந்து அதிகாரி உள்பட பலர் பாஜகவில் இணைந்தனர்.
அலுவலகம் சூறை
இந்த நிலையில் மேற்கு வங்கத்தின் நந்திகிராமில் உள்ள சுவேந்து அதிகாரியின் அலுவலகத்தை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் அடித்து நொறுக்கி விட்டதாக பாஜக குற்றம்சாட்டி உள்ளது. இது தொடர்பாக பாஜக தலைவர் கனிஸ்கா பாண்டா கூறியதாவது:- நந்திகிராமில் சுவேந்து அதிகாரியின் அலுவலகத்தை திரினாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் சூறையாடினார்கள். அவர்கள் தங்களிடம் உள்ள அதிகார சக்தியைப் பயன்படுத்தி இவ்வாறு செய்கிறார்கள்.
அதிகார போதை
ஏனெனில் அதிகாரம் உங்களுடன் உள்ளது, அதனால்தான் நீங்கள் இவ்வாறு செய்கிறீர்கள். இதில் ஈடுபட்டவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்யாவிட்டால் எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் சம்பவங்களுக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும். இந்த அநீதிக்கு எதிரான எங்கள் போராட்டம் தொடரும் என்று கனிஸ்கா பாண்டா கூறினார்.
திரிணாமுல் காங்கிரஸ் மறுப்பு
ஆனால் பாஜகவின் இந்த குற்றசாட்டை திரினாமுல் காங்கிரஸ் மறுத்துள்ளது. இது தொடர்பாக மிட்னாபூர் மாவட்ட திரிணாமுல் காங்கிரஸ் துணைத் தலைவர் எஸ்.கே.சுபியன் கூறுகையில், அவர்கள் (பாஜக) எப்போதும் பொய் சொல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். பழைய பாஜக தொண்டர்கள்தான் சுவேந்து அதிகாரியின் அலுவலகத்தை சூறையாடினர். ஆனால் பாஜக எங்கள் மீது குற்றம் சாட்டுகிறது. பாஜக எங்களை குறை கூறுவதை விட்டு விட்டு, தங்களது கட்சியினரை கட்டுப்படுத்த வேண்டும் என்றார்.