பாஜக அலுவலகத்தை தாக்கிய வழக்கு.. ஹர்திக் பட்டேலுக்கு 2 ஆண்டு சிறை.. குஜராத் ஹைகோர்ட் அதிரடி
பாஜக அலுவலகத்தை தாக்கிய வழக்கில் குஜராத் பட்டேல் இன தலைவர் ஹர்திக் பட்டேலுக்கு 2 வருட சிறை தண்டனை வழங்கப்பட்ட இருக்கிறது.
அஹமதாபாத்: பாஜக அலுவலகத்தை தாக்கிய வழக்கில் குஜராத் பட்டேல் இன தலைவர் ஹர்திக் பட்டேலுக்கு 2 வருட சிறை தண்டனை வழங்கப்பட்ட இருக்கிறது.
2015ல் குஜராத் முழுக்க பட்டேல் ஜாதி மக்கள் போராட்டம் நடத்தினார்கள். இடஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி அவர்கள் போராட்டம் செய்தனர். இதில் பெரும்பாலான இடங்களில் போராட்டத்தை, பட்டேல் குழுவில் இளம் தலைவர் ஹர்திக் பட்டேல் முன்னின்று நடத்தினார்.
அந்த போராட்டத்தின் போது, விஸ்நகரில் இருந்த பாஜக கட்சியின் அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது. இதில் சிலருக்கு மோசமான காயம் ஏற்பட்டது. இதில் ஹர்திக் பட்டேல் உட்பட 500 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் அவர் மீது பெயிலில் வராத வகையில் வழக்கு போடப்பட்டது. ஆனால் குஜராத் உயர்நீதிமன்றம் அதை ரத்து செய்து ரூ.5000 பிணையுடன் அவருக்கு பெயில் வழங்கி வழக்கை நடத்தியது. மேலும் 17 பேர் மீது வழக்கு விசாரணை நடக்கும் என்று கூறி மீதமுள்ளவர்களை விடுவித்தது.
இந்த நிலையில் தற்போது வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. அதன்படி குஜராத் பட்டேல் இன தலைவர் ஹர்திக் பட்டேலுக்கு 2 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டு இருக்கிறது. ஹர்திக் பட்டேல் ஆதரவாளர்கள் 2 பேரும் 2 ஆண்டு சிறை தண்டனை பெற்று இருக்கிறார்கள்.
அதேபோல் ஹர்திக் பட்டேலுக்கு 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த குஜராத் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றம் செல்வார் என்று கூறப்படுகிறது.