நாகாலாந்தில் 'கொடூரமான' நாய் கறி, பாம்பு கருவாடு விற்பனைக்கு மேனகா தடை வாங்க முயற்சிக்கலாமே?
நாகாலாந்தில் கொடூரமாக அரங்கேறும் நாய்கறி விற்பனைக்கு பாஜகவின் மேனகா காந்திகள் தடை வாங்க முடியுமா? என்பது சமூக ஆர்வலர்கள் கேள்வி.
சென்னை: காளைகளை கட்டித் தழுவும் தமிழகத்தின் ஏறுதழுவதல் எனும் பண்பாட்டு அடையாளத்தை கடுமையாக விமர்சிக்கும் பாஜகவின் மேனகா காந்தி உள்ளிட்டோர், அதே இந்தியாவின் மற்றொரு மாநிலமான நாகாலாந்தில் படுமோசமாக அரங்கேறும் நாய்கறி விற்பனைக்கு தடை விதிக்கும் திராணி இருக்கிறதா? என்பது சமூக ஆர்வலர்களின் கேள்வியாக உள்ளது.
தமிழகம் உட்பட பல மாநிலங்களில் பாஜக கொள்கையை முன்வைத்து காலூன்ற முடியவில்லை. இதனால் தமிழகம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கொல்லைப்புறம் வழியாக அதிகாரத்தைக் கைப்பற்ற கடுமையாக முயல்கிறது.
தமிழகத்தின் பண்பாட்டு அடையாளமான ஏறுதழுவுதல் எனப்படும் ஜல்லிக்கட்டே மிருகவதை என கூப்பாடு போடுகிறார்கள் பாஜக தலைவர்கள் பலர். ஆனால், இவர்கள் படுகொடூரமாக நாகலாந்தில் நடந்தேறி வரும் கறிக்காக விற்பனை செய்யப்படும் நாய், பாம்பு, தவளை உள்ளிட்டவற்றின் விற்பனை குறித்து வாய் திறப்பதில்லை.
நாய்கறி சந்தை
நாகாலாந்தின் தலைநகர் கோஹிமாவில் உள்ள கறி சந்தைகளில் புகழ்பெற்றது நாய்கறி சந்தைதான். உயிரோடு பிடித்து வரப்படும் நாய்கள் கை, கால்கள், வாய்கள் கயிற்றால் தைக்கப்பட்டு முகம் மட்டும் தெரியும் அளவுக்கு சாக்குகளில் கசாப்பு கடைக்கு கொண்டு வரப்படும். நம்ம ஊரில் கோழிகளை தூக்கி போடுவது போல கொத்து கொத்தாக நாய்களை ஒரு குவியலாக வைத்துவிடுவர்.
கொடூர படுகொலை
அதன்பின்னர் மர கம்பால் நாயின் தலையிலேயே அது சாகும்வரை அடிப்பர். அப்படித்தான் சாகடித்து அந்த நாயை வெட்டி கூறாக்கி தலை, கால், தொடை என விற்பனை செய்து வருகின்றனர்.
உயிருள்ளவை அனைத்தும்...
இதுமட்டுமல்ல.. உயிருள்ள பாம்பு, தவளை, எலி உள்ளிட்ட அனைத்தும் கோஹிமா சந்தைக்கு கொண்டுவரப்படும். அவை கொத்து கொத்தாக விற்பனை செய்யப்படும்.
நாய் நடமாட்டம் இல்லா நாகாலாந்து
கோஹிமாவின் மைய சந்தைப் பகுதியில் பாம்பு கருவாடுகள், நம்ம ஊர் மீன் கருவாடுகளை மிஞ்சும் வகையில் குவியல் குவியலாக வைக்கப்பட்டிருக்கும். நாகலாந்தில் நாய்கள் சுதந்திரமாக நடமாடுவதை எவராலும் அவ்வளவு எளிதில் பார்த்துவிட முடியாது. நாய்களைப் பொறுத்தவரை அது கறிக்குதான் என முடிவு செய்து கொடூரமாக கொலை செய்து கூறுபோட்டு விற்பனை செய்கின்றனர்.
திராணி இல்லையே...
ஏறுதழுவுதலையே கொடூர சித்திரவதை என வர்ணிக்கும் ஜீவகாருண்ய ஆத்மாக்களுக்கு, ஜல்லிக்கட்டு காளைகள் மீது ஏதோ ஏதோ சட்டங்களை பாய்ச்சுகிறவர்களுக்கும் கொந்தளிக்கிற மேனகா காந்திகளுக்கும், ராதா ராஜன்களுக்கும், பூர்வா ஜோஷிபுராக்களுக்கும் நாகாலாந்தின் நாய்கறி விற்பனை கண்ணுக்குத் தெரியாமல் அல்ல; அதை எதிர்க்கிற திராணி இல்லை என்பதே நிதர்சனம்.
அப்புறம் சவுண்டுவிடுங்க..
முதலில் அங்கு ரவுண்டு விடட்டும், பிறகு இங்கு வந்து சவுண்டு விடட்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.