உ.பி., உத்தரகாண்ட் முதல்வர்கள் யார்?.... டெல்லியில் இன்று பாஜக ஆட்சி மன்றக் குழு கூடுகிறது!
உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களின் முதல்வர்களைத் தேர்வு செய்ய பாஜகவின் ஆட்சி மன்றக் குழு கூட்டம் இன்று டெல்லியில் கூடுகிறது.
டெல்லி: உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் சட்டசபை தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து அம்மாநிலங்களின் முதல்வர்களை தேர்வு செய்ய பாஜகவின் ஆட்சி மன்றக் குழு கூட்டம் இன்று மாலை டெல்லியில் கூடுகிறது.
உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், கோவா, மணிப்பூர், பஞ்சாப் ஆகிய மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது.
பாஜக சார்பில் முதல்வர் வேட்பாளர்களாக எந்த மாநிலத்திலும் யாரும் முன்னிறுத்தப்படவில்லை. சட்டசபை தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு பேட்டியளித்த பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, நாங்கள் வெற்றி பெறும் மாநிலங்களில் தகுதி வாய்ந்த நபர்களே முதல்வர்களாக தேர்வு செய்யப்படுவர். அதுதொடர்பாக பாஜக ஆட்சி மன்றக் குழுவில் ஆலோசிக்கப்படும் என்றார்.
இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தின் முதல்வராக மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், மனோஜ் சின்ஹா, பாஜக எம்.பி. யோகி ஆதித்யநாத் ஆகியோரில் ஒருவரும், உத்தரகாண்ட்டில் மூத்த தலைவர்கள்கள் திரிவேந்திர சிங் ராவத், சத்பால் மகாராஜ் ஆகியோரில் ஒருவரும் தேர்ந்தெடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.