23 ஆம் தேதிக்குள் ஜம்மு-காஷ்மீர் அரசு அமைக்கப்படுமா? – இன்று பாஜகவுடன் மஜக பேச்சுவார்த்தை
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ஆட்சியமைப்பது தொடர்பாக பாஜக மற்றும் மக்கள் ஜனநாயகக் கட்சிகளுக்கு இடையே ஒருவழியாக உடன்பாடு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து பாஜக-மஜக பேச்சுவார்த்தை இன்று நடைபெற உள்ளது.
இது தொடர்பாக மக்கள் ஜனநாயக கட்சியின் 6 பேர் கொண்ட குழுவினர் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியிடம் இன்று பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
மக்கள் ஜனநாயகக் கட்சியின் முசாபர் பெய்க் உசேன் தலைமையிலான குழு பாஜகவுடன் தொடர்ச்சியாக நடத்திய பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இதையடுத்து டெல்லியில் இன்று மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி, பாஜக மூத்த தலைவர் அருண் சிங் ஆகியோரை சந்திக்க மக்கள் ஜனநாயக கட்சிக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் முப்தி முகமது சயீது ஜம்முவில் 6 ஆண்டுகளுக்கு முதல்வர் பதவியை வகிக்க பாஜக கொள்கை அளவில் ஒப்புக் கொண்டுள்ளதாகவும், பாஜக கட்சியின் மூத்த தலைவர் நிர்மல் சிங்குக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும், வருகின்ற 23 ஆம் தேதிக்கு முன்னதாக ஆட்சி அமைக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.