இனி வேண்டாம் சரிப்பட்டு வராது.. அத்வானி போல எடியூரப்பாவையும் கழற்றிவிடும் பாஜக
கர்நாடகாவில் பாஜக சந்தித்த பின்னடைவு காரணமாக எடியூரப்பா கொஞ்சம் கொஞ்சமாக கட்சியில் இருந்து கழற்றிவிடப்படுவார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
Recommended Video
பெங்களூர்: கர்நாடகாவில் பாஜக சந்தித்த பின்னடைவு காரணமாக எடியூரப்பா கொஞ்சம் கொஞ்சமாக கட்சியில் இருந்து கழற்றிவிடப்படுவார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் அவருக்கு கட்சியில் பொறுப்புகள் எதுவும் வழங்கப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் 104 இடங்களில் வெற்றி பெற்று 7 எம்எல்ஏக்கள் பலம் இல்லாததால் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமலே பதவி விலக்கிக் கொண்டது. இதனால் தற்போது மஜத தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது. இது எடியூரப்பாவிற்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் மஜத கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி. அவர் நாளை முதல்வராக பதவியேற்க உள்ளார்.
கட்சியை விட்டு கழற்றிவிட முடிவு
எடியூரப்பாவின் இந்த மோசமான தோல்வியை அடுத்து அவரை கட்சியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக கழற்றிவிட முடிவு செய்து இருக்கிறார்கள். அவர் மீது வைக்கப்பட்டு இருக்கும் ஊழல் புகார்கள், இந்த தேர்தலில் முக்கிய பங்கு வகித்தது. இதனால் பாஜகவிற்கு கொஞ்சம் பின்னடைவு ஏற்பட்டது. இதனால் அவரை கொஞ்சம் கொஞ்சமாக கட்சியில் அமைதிப்படுத்திவிட்டு அவருக்கு பதிலாக ஸ்ரீராமுலு, ஆனந்த் குமார் ஹெக்டே உள்ளிட்ட தலைவர்களை மேலே கொண்டு வர முடிவு செய்து இருக்கிறார்கள்.
அடுத்த தேர்தல் மட்டும்
எடியூரப்பா நாடாளுமன்ற தேர்தல் வரை மட்டுமே கட்சியில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார். தற்போது கர்நாடகாவில் கிட்டத்தட்ட 20 சதவிகித வாக்குகளை, லிங்காயத்துகள் பெற்றுள்ளனர். அவர்களின் வாக்குகளை கவரும், சிறந்த பாஜக முகம் எடியூரப்பாவை தவிர வேறு யாரும் கட்சியில் இல்லை. இதனால் அவரை உடனடியாக விட்டுக்கொடுக்காமல், கொஞ்சம் கொஞ்சமாக அத்வானிக்கு செய்தது போல செய்து, கட்சியில் ஒன்றும் இல்லாமல் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
வயசாகிடும்
அதேபோல் இப்போதே அவருக்கு 70+ வயசாகிவிட்டது. மேடையில் பேசும்போது பல இடங்களில் தவறு செய்கிறார். இதனால் அடுத்த சட்டமன்ற தேர்தலில் எல்லாம் அவரை முக்கியமான வேட்பாளராக முன்னிறுத்த முடியாது. இதன் காரணமாக இப்போதே கட்சியில் முக்கியமான ஒரு முகத்தை உருவாக்கி, அவரை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்த திட்டமிட்டுள்ளனர். ஸ்ரீராமுலுதான் அந்த இடத்திற்கு வர உள்ளார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
ஏற்கனவே
இதேபோல் ஏற்கனவே 2013ல் பிரச்சனை நடந்துள்ளது.ஊழல் புகார் காரணமாக எடியூரப்பாவை பாஜக கழட்டிவிட்டது. இதனால் அப்போது நடந்த சட்டமன்ற தேர்தலில் தனியாக போட்டியிட்டு கிட்டத்தட்ட 30 தொகுதிகளில் பாஜகவை எடியூரப்பா தோற்கடித்தார். இதனால் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. இந்த நிலைமை மீண்டும் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.