ராஜ்யசபா தேர்தலுக்கான 2ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது பாஜக !
டெல்லி: மாநிலங்களவை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட பாஜக வேட்பாளர்களின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஆந்திராவில் ஆளும் தெலுங்கு தேச கட்சி ஆதரவுடன் எம்.பி. பதவிக்கு மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு போட்டியிடுகிறார்.
தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திர உள்பட 15 மாநிலங்களில் 57 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிய உள்ளது. இதையடுத்து வரும் ஜூன் மாதம் 11ம் தேதி மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தல் நடத்தப்பட உள்ளது.
மாநிலங்களவை தேர்தலுக்கான பாஜக வேட்பாளர்களின் முதல் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. 12 பேர் அடங்கிய அந்த பட்டியலில் ராஜஸ்தானில் இருந்து பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு, ஓம் பிரகாஷ் மாதுர்,ஹர்ஷ்வர்த்தன் சிங் மற்றும் ராம்குமார் வர்மா ஆகியோர் போட்டியிடுகிறார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் ஹரியானாவில் இருந்து சவுத்ரி பிரேந்தர் சிங்கும், மகாராஷ்டிராவில் இருந்து பியூஷ் கோயலும், கர்நாடகாவில் இருந்து நிர்மலா சீதாராமனும், ஜார்க்கண்டில் இருந்து முக்தார் அப்பாஸ் நக்வியும், குஜராத்தில் இருந்து புருஷோத்தன் ரூபலாவும், மத்திய பிரதேசத்தில் இருந்து அனில் மாதவ் தாவேவும், சத்தீஸ்கரில் இருந்து ராம்விசார் நீதமும், பீகாரில் இருந்து கோபால் நாராயண் சிங்கும் போட்டியிடுகிறார்கள்.
இந்த நிலையில் 6 பேர் கொண்ட இரண்டாவது கட்ட பட்டியலை பாஜக இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி ஆந்திர மாநிலத்திலிருந்து ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவும், மத்திய பிரதேசத்திலிருந்து எம்.ஜே. அக்பரும் போட்டியிடுகின்றனர். மகாராஷ்ட்ராவில் இருந்து வினய் ஸ்திரபுத்தே, விகாஷ் மகாத்மே போட்டியிடுகின்றனர். உத்தரப்பிரதேசத்தில் இருந்து ஷிவ் சுக்லாவும் ஜார்கண்டில் இருந்து மகேஷ் போடரும் போட்டியிடுகின்றனர்.