வேட்புமனு தாக்கல் செய்தார் அமித் ஷா.. காந்திநகர் தொகுதியில் பிரமாண்ட பேரணி
காந்திநகர்: குஜராத் மாநிலம் காந்திநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக தலைவர் அமித் ஷா, கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் பேரணியாகச் சென்று இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
மாநிலங்களவை உறுப்பினரான அமித் ஷா முதல் முறையாக மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதால் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.
இந்நிலையில், வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று காலை அகமதாபாத் வந்த அமித் ஷா, அங்குள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர், தங்கள் செல்வாக்கை காட்டும் விதமாக, பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமித் ஷாவுடன் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள், கூட்டணி தலைவர்கள் உத்தவ் தாக்கரே, பிரகாஷ் சிங் பாதல், ராம் விலாஸ் பஸ்வான் உள்ளிட்ட பலர் பங்கேற்று உரையாற்றினர்.
தாத்தா.. இந்த தொப்பி வேணாம்.. ஆஹா.. அமித் ஷா பேத்திக்கு கூட பாஜக கலர் பிடிக்கலையே!
இந்த பொதுக்கூட்டம் முடிந்ததும், அங்கிருந்து ஆதரவாளர்களுடன் பேரணியாக புறப்பட்ட அமித் ஷா, காந்திநகர் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
குஜராத்தில் உள்ள 26 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடக்கிறது. காந்திநகர் பாஜக மூத்த தலைவர் அத்வானி 6 முறை வெற்றி பெற்ற தொகுதியாகும்.