மணிப்பூர் தேர்தல் அச்சத்தால் சண்முகநாதனை பதவி விலக சொன்ன அமித்ஷா
ஷில்லாங்: மணிப்பூர் சட்டசபை தேர்தலில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சத்தில் பாலியல் புகாரில் சிக்கிய மேகாலயா ஆளுநர் சண்முகநாதனை உடனே ராஜினாமா செய்யுமாறு பாஜக தலைவர் அமித்ஷா வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மணிப்பூர் சட்டசபை தேர்தல் மார்ச் மாதம் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பாஜக வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கருத்து கணிப்புகள் தெரிவித்து வருகின்றன.
பாலியல் புகார்
இந்த நிலையில் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தைச் சேர்ந்தவரான மேகாலயா ஆளுநர் சண்முகநாதன் பாலியல் புகாரில் சிக்கினார். இப்புகாரை சண்முகநாதன் மறுத்திருந்தார்.
விஸ்வரூபம்
ஆனால் ராஜ்பவன் ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஆளுநர் மாளிகையை இளம்பெண்கள் கிளப்பாகவே மாற்றிவிட்டார் சண்முகநாதன் என பிரதமர், ஜனாதிபதிக்கு புகார் அனுப்பினர். இதனால் விவகாரம் விஸ்வரூபமெடுத்தது.
மணிப்பூரில் எதிரொலி அச்சம்
மேகாலயாவில் சண்முகநாதனுக்கு எதிராக போராட்டமும் வெடித்தது. இது சட்டசபை தேர்தல் நடைபெறும் மணிப்பூரிலும் எதிரொலிக்கும் சூழ்நிலை உருவானது. இதனால் பதறிப் போனது பாஜக மேலிடம்.
அமித்ஷா நெருக்கடி..
சண்முகநாதனை தொடர்பு கொண்ட பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, மணிப்பூர் தேர்தலில் கடும் பாதிப்பை இந்த விவகாரம் ஏற்படுத்திவிடும். ஆகையால் உடனே பதவியை ராஜினாமா செய்துவிடுங்கள் என கூறியுள்ளார். இதையடுத்தே சண்முகநாதன் பதவியை ராஜினாமா செய்தார் என்கின்றன ஷில்லாங் தகவல்கள்.