தலைகீழாக மாறிய கோவா அரசியல் களம்.. எம்எல்ஏ-க்கள் வீடுகளுக்கே தேடி போய் பேரம் பேசிய பாஜக.!
பனாஜி: கர்நாடகத்திற்கு அடுத்தபடியாக அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ள கோவா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான செல்லகுமார் முகாமிட்டுள்ளார். பாஜக தங்கள் கட்சி எம்எல்ஏ-க்களை விலை பேசி இழுத்துள்ளதாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
2017-ம் ஆண்டு கோவாவில் கடந்த பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில் அம்மாநிலத்தில் உள்ள 40 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 17 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக 13 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
கோவா தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றிய போதிலும் ஆட்சியமைக்க தேவையான 21 இடங்களை பெறவில்லை. இதனால் எக்கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டது. அப்போதும் மத்தியில் பாஜக ஆட்சியே நடைபெற்றதால், பாஜக தனது செல்வாக்கை பயன்படுத்தி மகாராஷ்ட்ரவாடி கோமந்த் கட்சி, கோவா ஃபார்வேர்டு கட்சி மற்றும் சுயேச்சை எம்எல்ஏ-க்கள் ஆதரவுடன் ஆட்சியமைத்தது.
இதனையடுத்து அப்போது பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு கோவா முதல்வராக பதவியேற்றார். இந்நிலையில் சமீபத்தில் தான் அவர் கணைய புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து பாஜகவை சேர்ந்த பிரமோத் சாவந்த் கோவா மாநில முதல்வரானார். இந்நிலையில் தான் பாபு கவேல்கர் தலைமையில் 10 காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் அக்கட்சியிலிருந்து விலகி நேற்று அதிரடியாக பாஜக-வில் சேர்ந்தனர்.
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள கோவா மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் செல்லகுமார், எங்கள் கட்சியிலிருந்து வெளியேறி பாஜக-வில் சேர்ந்த சில உறுப்பினர்கள் என்னை தொடர்பு கொண்டு பேசினர்.
அப்போது பாஜக தரப்பு தான் முதலில் தங்களை நேரடியாக அணுகியதாகவும், இதற்காக பலர் தங்களது வீடுகளுக்கே தேடி வந்ததாகவும் கூறினர். பல்வேறு சலுகைகள் மற்றும் அமைச்சரவை பொறுப்புகளையும் தருவதாக ஆசை காட்டினர் என தெரிவித்ததாக குறிப்பிட்டார்.
பெரும்பான்மை கொண்ட ஆட்சி என்பதை காட்டும் வகையில், பாஜக கோவாவில் ஆட்சியமைத்தது முதலே தங்களது கட்சி எம்எல்ஏக்களை தொடர்ந்து விலை பேசியதாக செல்லகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.