ம.பியில் 16 மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக: வியாபம் முறைகேடு எங்கே போச்சு?
போபால்: வியாபம் முறைகேட்டில், மத்திய பிரதேசத்தில் ஆளும் பாஜக அரசுக்கு தொடர்புள்ளது என்று எதிர்கட்சியினர் பல்வேறு புகார்களை தெரிவித்தாலும் அங்கு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், 16 மாநகராட்சிகளையும் கைபற்றிய சாதனை படைத்துள்ளது பாஜக.
மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு, சமீபத்தில், மாநகராட்சி தேர்தல் நடந்தது. தேர்தல் முடிவு கள் ஞாயிறன்று அறிவிக்கப்பட்டன.
அங்கு மொத்தம் உள்ள, 16 மாநகராட்சிகளிலுமே, ஆளும் கட்சியான பாஜக அபார வெற்றி பெற்றது. வெற்றி பெற்றவர்களில் விதிசாவில் முகேஷ் டாண்டனும், உஜ்ஜைனியில் மீனா ஜன்வாலும் குறிப்பிடத்தக்கவர்கள்.
வியாபம் முறைகேடு புகார்
வியாபம் முறைகேட்டில், மாநில அரசுக்கு தொடர்புள்ளதாக அவதுாறு பிரசாரம் செய்து வரும் காங்கிரஸ் கட்சியினருக்கு, இந்த வெற்றி மூலம், மத்தியபிரதேச மக்கள், சவுக்கடி கொடுத்துள்ளனர் என்றுஇந்த வெற்றி குறித்து அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
மோடிக்கு கிடைத்த வெற்றி
மத்திய பிரதேச மாநிலத்தில் முதல் முறையாக 16 மாநகராட்சிகளையும் பாஜக கைபற்றி சாதனை படைத்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். இந்த வெற்றியை பிரதமர் மோடிக்கு சமர்பிக்கிறேன் என்றும் சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.
|
பிரதமர் மோடி வாழ்த்து
இந்த வெற்றிக்கு, பிரதமர் நரேந்திர மோடி, டுவிட்டரில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச முதல்வருக்கும், பாஜகவினருக்கும் இந்த வெற்றி உற்சாகத்தை தரும் என்று மோடி கூறியுள்ளார்.
பட்டாசு பலகாரம்
உள்ளாட்சித் தேர்தல் வெற்றியை மாநிலம் முழுவதிலுமுள்ள பாஜகவினர் சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர். பட்டாசுகளை வெடித்தும், லட்டுகளை கொடுத்தும் தங்களின் உற்சாகத்தை பாஜகவினர் வெளிப்படுத்தினர்.