அஸ்ஸாம் : தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரத்துக்குப் பின்பும் 3 தொகுதிகளை தக்க வைத்த பாஜக!
Recommended Video
குவஹாத்தி: அஸ்ஸாமில் 4 சட்டசபை தொகுதிகள் இடைத்தேர்தலில் பாஜக ஏற்கனவே வென்ற 3 தொகுதிகளைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது நாடு முழுவதும் பெரும் விவாதத்துக்குள்ளான தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரமானது பாஜகவின் வெற்றியை எந்த வகையிலும் பாதிக்கவில்லை என்பதை இடைத்தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தி இருக்கின்றன.
அஸ்ஸாமில் வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இதை கட்டுப்படுத்தும் வகையில் உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறைப்படுத்தப்பட்டது.
இதன்படி சுமார் 90.00.000 லட்சம் பேர் உரிய ஆவணங்கள் இல்லாமல் அஸ்ஸாமில் குடியேறி இருப்பது தெரியவந்தது. இதுநாடு முழுவதும் பெரும் விவாதத்துக்குரியதாக மாறியது. பல்வேறு மாநிலங்களிலும் சட்டவிரோத குடியேறிகளைக் கட்டுப்படுத்த இதை நடைமுறைப்படுத்தப் போவதாக அறிவித்தன.
அதேநேரத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான பாஜகவின் நடவடிக்கை என அரசியல் ரீதியாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இந்நிலையில் அஸ்ஸாமின் ரதாபாரி, சோனாரி, ரங்காபாரா மற்றும் ஜனியா ஆகிய 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அக்டோபர் 21-ந் தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரம் எதிரொலிக்கும் என கூறப்பட்டது.
வெற்றிக்கொடி நாட்டிய கேப்டன் தமிழ்ச்செல்வன்... மராட்டிய மண்ணில் தமிழர் சாதனை
இடைத்தேர்தலுக்கான காரணம்
ரதாபாரி, சோனாரி, ரங்காபாரா ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு எம்.எல்.ஏக்களான பாஜகவின் கிர்பாநாத் மல்லா, தபான் கோகாய், பல்லாப் லோசன் தாஸ் ஆகியோர் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யானார்கள். ஜனியா தொகுதியில் வென்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ. அப்துல் கலாஹூவும் எம்.பி.யானார். இதையடுத்து இந்த 4 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.
3 தொகுதிகளை தக்க வைத்த பாஜக
இந்த இடைத்தேர்தலில் மொத்தம் 20 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டன. இதில் ரதாபாரி, சோனாரி, ரங்காபாரா ஆகிய 3 தொகுதிகளையும் பாஜக தக்க வைத்துள்ளது. ஜனியா தொகுதியை ஏ.ஐ.யூ.டி.எப்- இடம் காங்கிரஸ் பறிகொடுத்திருக்கிறது.
ஜனியாவில் காங். தோல்வி முகம்
ரதாபாரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை விட சுமார் 10,000 வாக்குகள் முன்னணியில் இருக்கிறார் பாஜகவின் பிரேந்திர ரபிதாஸ். ரங்காபாரா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை விட பாஜகவின் ராஜேன் போர்தாகூர் சுமார் 28,000 வாக்குகள் முன்னணியில் உள்ளார். சோனாரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரைவிட பாஜகவின் நபிந்தா ஹண்டிஹ் சுமார் 2,000 வாக்குகள் முன்னணியில் உள்ளார். ஜனியா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சுமார் 10,000 வாக்குகள் பின் தங்கி உள்ளார். பொதுவாக தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரம் பாஜகவுக்கு அஸ்ஸாமில் பின்னடைவை தரவில்லை. கை கொடுத்திருக்கிறது என்பதுதான் யதார்த்தம்.
மேகாலாயா மாநில கட்சி
மேகாலாயாவின் ஷெல்லா சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் யு.டி.எப். வேட்பாளர் பாலாஜித் குபார் சின்ராம் 10,586 வாக்குகளுடன் முன்னணியில் உள்ளார். 2-வது இடத்தில் மக்கள் ஜனநாயக முன்னணி, 3-வது இடத்தில் காங்கிரஸ், 4-வது இடத்தில் பாஜக உள்ளன.
அருணாசலில் சுயேட்சைகள்
அருணாசலப் பிரதேசத்தின் கோன்சா மேற்கு சட்டசபை தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது. இதில் சுயேட்சை வேட்பாளர் சதாக் அபோ மற்றொரு சுயேட்சை வேட்பாளர் அஜெத் கோம்டோக்கைவிட சுமார் 2,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.