காஷ்மீர் விவகாரத்தில் சமரசத்துக்கு இடமில்லாமல் செயல்படுக: பா.ஜ.கவுக்கு ஆர்.எஸ்.எஸ். அட்வைஸ்
டெல்லி: ஜம்மு காஷ்மீர விவகாரத்தில் எந்த ஒரு சமரசத்துக்கும் இடமில்லாமல் மத்திய பாரதிய ஜனதா அரசு செயல்பட வேண்டும் என்று அக்கட்சியின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கம் அறிவுறுத்தியுள்ளது.
மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கம், 3 நாள் ஆலோசனைக் கூட்டத்தை டெல்லியில் கடந்த வாரம் நடத்தியது. பாரதிய ஜனதா அரசுக்கு வழிகாட்டும் வகையில் இக்கூட்டம் நடைபெற்றது.
முன்னாள் ராணுவத்தினரின் ஓய்வூதியம், காஷ்மீர் பிரச்சனை, வங்கதேச நாட்டவரின் சட்டவிரோத குடியேற்றம், சீனாவுடனான எல்லை பிரச்சனை என பல்வேறு பிரச்சனைகள் குறித்து இக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. எந்தெந்த பிரச்சனைகளுக்கு பா.ஜ.க. அரசு உடனடி முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலையும் ஆர்.எஸ்.எஸ். கூறியது.
குறிப்பாக தேசப் பாதுகாப்பு, முன்னாள் ராணுவத்தினரின் ஓய்வூதிய விவகாரம் ஆகிய விவகாரங்கள் இந்த கூட்டத்தில் முதன்மையாக விவாதிக்கப்பட்டது.
காஷ்மீர் விவகாரம்
ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதலால் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு உடனடியாக நிவாரணப் பணிகளை செய்ய வேண்டும் என்பதையும் ஆர்.எஸ்.எஸ். வலியுறுத்தியது.
காஷ்மீர் பிரச்சனையில் எந்த ஒரு சமரசத்துக்கும் இடமில்லாமல் உறுதியாக செயல்பட வேண்டும் என்ற கருத்தையும் ஆர்.எஸ்.எஸ். முன்வைத்தது. அதே நேரத்தில் ஜம்மு காஷ்மீரத்தில் கூட்டணிக் கட்சியான மக்கள் ஜனநாயகக் கட்சியே காஷ்மீர் பிரச்சனை குறித்து அனைத்து முடிவுகளையும் எடுக்க விட்டுவிடக் கூடாது என்பதையும் அந்த இயக்கத்தின் தலைவர்கள் சுட்டிக் காட்டியிருக்கின்றனர்.
எல்லை விவகாரம்
அருணாசலப் பிரதேச எல்லை விவகாரத்தில் மத்திய அரசு மிகவும் உறுதியாக இருக்க வேண்டும். இதில் எந்த ஒரு பலவீனமான நிலைப்பாட்டையும் எடுத்துவிடக் கூடாது என்பதையும் அந்த இயக்கம் வலியுறுத்தியிருக்கிறது. அதேபோல் அருணாசல பிரதேச மக்களுடனான உறவை மத்திய அரசு நெருக்கமாக்கிக் கொள்வதற்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் ஆர்.எஸ்.எஸ். அறிவுறுத்தியிருந்தது.
ராணுவத்தினரின் ஓய்வூதியம்
முன்னாள் ராணுவத்தினருக்கான ஓய்வூதிய விவகாரத்தில் மத்திய அரசு முன்னரே தீர்வு கண்டிருக்க வேண்டும்; இந்த பிரச்சனை நீடித்ததால் மத்திய அரசு மீதான இமேஜ் பாதிக்கப்பட்டிருக்கிறது என்ற அதிருப்தியையும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் வெளிப்படுத்தினர்.
வங்கதேசத்தவர் குடியேற்றம்
மேலும் வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறுபவர்களைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை தேவை எனவும் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் பா.ஜ.க. தலைவர்களை வலியுறுத்தியுள்ளது.