உ.பி., உத்தரகண்ட்.. பாஜகவுக்கு இதுவரை 2 லட்டு.. மணிப்பூரிலும் ஆட்சியமைக்குமா?
உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்களில் பாஜக உறுதியாக ஆட்சியமைக்கிறது. மணிப்பூரிலும் அதற்கு வாய்ப்பு உள்ளது.
டெல்லி: 5 மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக 2 மாநிலங்களில் முன்னிலை வகித்து ஆட்சியை பிடிக்க உள்ளது. மணிப்பூரிலும் அதற்கான வாய்ப்பு இன்னும் உள்ளது.
பணமதிப்பிழப்பு, மோடியின் வெளிநாட்டுப் பயணம், பணத்தட்டுப்பாடு, ஊழல் புகார்கள், ஹிந்துத்துவ கொள்கை ஆகியவற்றை்க கொண்டு பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகளின் பிரசார பீரங்கிகள் முன்வைத்தன.
எனினும் அவற்றை எல்லாம் புறந்தள்ளிவிட்டு இன்று உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய 2 மாநிலங்களில் பாஜக பெரிய வெற்றியைப் பெறுகிறது. கோவாவிலும் நூலிழையில்தான் பாஜக வெற்றி வாய்ப்பை பெறவோ இழக்கவோ கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் பாஜக தொண்டர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
15 ஆண்டுகளுக்குப் பிறகு உ.பியில்.
உத்தரப்பிரதேசத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக ஆட்சியை பிடிக்கிறது. 2002-ஆம் ஆண்டு அம்மாநில முதல்வராக ராஜ்நாத் சிங் இருந்தார். மாநிலத்தை ஆண்ட சமாஜவாதி கட்சி, காங்கிரஸுடன் கைகோத்து தேர்தலை சந்தித்தது. எனினும் ஆட்சியை தக்க வைக்க முடியாத சூழல் நிலவுகிறது.
உத்தரகண்ட்
உத்தரகண்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குடியரசுத் தலைவர் ஆட்சிக்குப்பிறகு பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியில் காங்கிரஸ் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. ஆனால் தற்போது அந்த மாநிலத் தேர்தலில் பெ்ரும்பாலான இடங்களில் பாஜக வெற்றி பெறவுள்ளது.
மணிப்பூரில் வாய்ப்புண்டா
மணிப்பூரில் பாஜக ஆட்சி அமைக்குமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. காரணம் அங்கு அது காங்கிரஸுக்கு கடும் போட்டியைக் கொடுத்துக் கொண்டுள்ளது.
இரோம் ஷர்மிளா
ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை எதிர்த்து சமூக ஆர்வலர் இரோம் ஷர்மிளா 16 ஆண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டார். பின்னர் தனி கட்சி தொடங்கி ஆட்சி அமைத்தால் மட்டுமே அந்த சட்டத்தை நீக்க முடியும் என்றும் கருதினார். ஆனால் அவரை மக்களே நிராகரித்து விட்டனர்.
பாஜக வருமா
அங்கு பாஜக ஆட்சியைப் பிடித்தால் அது வரலாறாக அமையும். எனவே பாஜக ஆட்சியமைக்குமா என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது..