பீகாரில் கிரிமினல்களுக்கு பா.ஜ.க சீட் விற்பனை - சொந்த கட்சி எம்.பி. ஆர்.கே.சிங் பகீர் புகார்!!
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி கிரிமினல்களிடம் பணம் பெற்றுக் கொண்டு சீட் வழங்குவதாக அக்கட்சியின் எம்.பி. ஆர்.கே.சிங் பகீர் குற்றச்சாட்டைத் தெரிவித்துள்ளார்.
243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு வரும் அக்டோபர் 12-ந் தேதி தொடங்கி நவம்பர் 5-ந் தேதி வரை 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டுள்ளது.
இந்த வேட்பாளர் பட்டியலை முன்னாள் உள்துறை செயலாளரும் பா.ஜ.க. எம்.பி.யுமான ஆர்.கே.சிங் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:
பீகாரில் பாரதிய ஜனதா கட்சியினர் பணத்தை வாங்கிக் கொண்டு சீட்டுகளை விற்பனை செய்து வருகின்றனர். இதனால் உண்மையான கட்சியினருக்கு சீட் கிடைக்காமல் போய்விட்டது.
தற்போது சரியாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் எம்.எல்.ஏ.க்கள் பலருக்கு மீண்டும் சீட் தரப்படவில்லை. இந்த சீட்டுகள் கிரிமினல்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது கட்சித் தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு ஆர்.கே.சிங். கூறியுள்ளார்.
ஆனால் பா.ஜ.க. மூத்த தலைவர் சித்தார்த்நாத் சிங், ஆர்.கே.சிங்கின் இந்த கருத்தை நிராகரித்துள்ளார். கட்சியில் ஜனநாயக முறைப்படியே வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.