மஹராஷ்டிரா சபாநாயகராக பாஜகவின் பக்தே தேர்வு! பதவி ஏற்ற உடனே கடும் எதிர்ப்பை சம்பாதித்தார்!!
மஹாராஷ்டிரா சட்டசபை சபாநாயகர் தேர்தலில் பாஜக, காங்கிரஸ், சிவசேனா ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. பாஜக சார்பில் ஹரிபாவ் பக்தே, காங்கிரஸ் சார்பில் வர்ஷா கெய்க்வாட் மற்றும் சிவசேனா சார்பில் விஜய் அவ்தி ஆகியோர் களத்தில் இறக்கப்பட்டனர்.
இன்று முற்பகல் 11 மணிக்கு சட்டசபை கூடியதும் முதல் நடவடிக்கையக சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது. அப்போது சிவசேனா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை வாபஸ் பெறுவதாக அறிவித்தன.
இதையடுத்து பாஜக வேட்பாளர் ஹரிபாவ் பக்தே போட்டியின்றி சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். இதன் பின்னர் பாஜக அரசு பெரும்பான்மையை நிரூபிக்க சபாநாயகர் 'குரல்' வாக்கெடுப்புக்கு உத்தரவிட்டார்.
இதனை காங்கிரஸ், சிவசேனா கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. இந்த எதிர்ப்பையும் மீறி குரல் வாக்கெடுப்பு நடத்தி பாஜக பெரும்பான்மையை நிரூபித்து நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக சபாநாயகர் பக்தே அறிவித்தார்.
இதற்கு எதிராக சிவசேனா, காங்கிரஸ் கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. இரு கட்சித் தலைவர்களும் சபாநாயகரின் 'குரல் வாக்கெடுப்பு' முறைக்கு எதிராக ஆளுநரிடம் முறையிடப் போவதாக அறிவித்துள்ளனர்.
சபாநாயகர் பதவி ஏற்ற சிறிது நேரத்திலேயே பெரும் களேபர சர்ச்சைக்கு வித்திட்டிருக்கிறார் பக்தே