நிபந்தனையின்றி ஜனவரி 18ம் தேதி பாஜகவில் மீண்டும் 'சரணடைகிறார்' எதியூரப்பா...!
பெங்களூர்: பாஜகவில் மீண்டும் சேர்ந்து கொள்ள நல்ல நாள் பார்த்து விட்டார் முன்னாள் முதல்வர் எதியூரப்பா். ஜனவரி 18ம் தேதி அவர் மீண்டும் தனது தாய்க்கழகத்தில் இணைந்து கொள்கிறார்.
எதியூரப்பா மீது நிலுவையில் உள்ள ஏராளமான ஊழல் வழக்கு விவகாரங்களை ஓரம் கட்டி வைத்து விட்டு, லோக்சபா தேர்தலை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு, எதியூரப்பாவை மீ்ண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ள கட்சித் தலைமை முடிவெடுத்து விட்டதையே இது காட்டுவதாக கூறப்படுகிறது.
எதியூரப்பாவுடன் அவர் தொடங்கிய கர்நாடக ஜனதாக் கட்சியும் பாஜகவில் இணைக்கப்படுகிறது. லிங்காயத் சமூக்கத்தின் வலிமை வாய்ந்த தலைவர்களில் ஒருவரான எதியூரப்பாவின் சேவை, லோக்சபா தேர்தலுக்கு அவசியம் தேவை என்பதால் அவரை மீண்டும் கட்சிக்குள் சேர்க்க பாஜக ஒப்புக் கொண்டுள்ளதாம்.
எதியூரப்பா இல்லாத நிலையில் கர்நாடகத்தில் கடந்த சட்டசபைத் தேர்தலைச் சந்தித்த பாஜக மிக மோசமான தோல்வியைச் சந்தித்து ஆட்சியையும் பறி கொடுத்தது. காங்கிரஸ் வாய்ப்பை கவ்விக் கொண்டு ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து விட்டது. வழக்கமாக காங்கிரஸில்தான் கோஷ்டிப் பூசல் நாறும். ஆனால் அதற்கு மாறாக கர்நாடக பாஜகவில் ஏற்பட்ட கோஷ்டி மோதலால் பாஜக தலைமை பலமுறை பஞ்சாயத்துக்காக பெங்களூர் வர வேண்டிய நிலை எதியூரப்பா காலத்தில் ஏற்பட்டது நினைவிருக்கலாம். இதனால் பலமுறை எதியூரப்பா ஆட்சி கவிழும் நிலையும் ஏற்பட்டது.
உச்சகட்டமாக எதியூரப்பா மீது ஏகப்பட்ட முறைகேடு, ஊழல் புகார்களும் குவிந்தன. இதையடுத்து அவரை வலுக்கட்டாயமாக முதலர் பதவியிலிருந்து நீக்கியது பாஜக தலைமை. இதையடுத்து கைதாகி சிறைக்கும் போய் சீக்கிரமே வெளியே வந்தார் எதியூரப்பா. வந்த பின்னர் கர்நாடக ஜனதாக் கட்சி என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். இப்போது மீண்டும் கட்சியுடன் இணைகிறார்.
எதியூரப்பா மீண்டும் பாஜகவுக்குத் திரும்பி வர நரேந்திர மோடிதான் முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது. காரணம், எதியூரப்பா தொடர்ந்து மோடி மூலமாக கட்சிக்குள் திரும்ப முயற்சித்து வந்ததே. லோக்சபா தேர்தலில் கர்நாடகத்தில் மீண்டும் பலத்துடன் வெற்றியைப் பெற எதியூரப்பா அவசியம் என்று மோடி மூலமாக கட்சித் தலைமைக்கு எடுத்துச் சொல்லப்பட்டு அவர்களும் சம்மதித்ததைத் தொடர்ந்து தற்போது எதியூரப்பாவை மீண்டும் சேர்த்துக் கொள்ள பச்சைக் கொடி காட்டப்பட்டு விட்டதாம்.
நேற்று எதியூரப்பாவுக்கு பாஜக தலைமையிலிருந்து முறைப்படி அழைப்பும் வந்து சேர்ந்தது. இதையடுத்து ஜனவரி 18ம் தேதி தானும், தனது கட்சியும் பாஜகவில் முறைப்படி இணைவதாக எதியூரப்பா தெரிவித்தார். மேலும் நேற்று பெங்களூரில் உள்ள பாஜக தலைமையகத்திற்கும் அவர் சென்று அங்கு மாநிலத் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார்.
எதியூரப்பா சந்திப்புக்குப் பின்னர் மாநில பாஜக தலைவர் பிரகலாத் ஜோஷி கூறுகையில், முழு மனதுடன் எதியூரப்பாவை வரவேற்கிறோம். கட்சியின் தூண்களில் அவரும் ஒருவர். அவர் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. அவருடன் இணைந்து கட்சியை வலுப்படுத்துவோம் என்றார் அவர்.