திரிணாமுல் எம்எல்ஏ சுட்டுக்கொலை… பாஜகவின் முகுல்ராய் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு
Recommended Video
கொல்கத்தா:திரிணாமுல் எம்எல்ஏ கொல்லப்பட்ட விவகாரத்தில் பாஜக மூத்த தலைவர் முகுல் ராய் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணகஞ்ச் தொகுதி எம்எல்ஏவான சத்யஜித் பிஸ்வாஸ் , நாடியா மாவட்டத்தின் புல்பாரி பகுதியில் சரஸ்வதி பூஜை விழாவில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மேற்கு வங்கத்தில் ஏற்கெனவே பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் இடையே மோதல் போக்கு நிலவி வரும் சூழலில், இக்கொலை சம்பவம் மேலும் பதற்றத்தை அதிகரித்ததது. இந் நிலையில், கொலை தொடர்பாக, பாஜக மூத்த தலைவர் முகுல் ராய் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அவர்களில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 3 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கொலைக்கு பயன்படுத்திய நாட்டுத் துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டுள்ளது.இது குறித்து போலீசார் கூறியிருப்பதாவது:
முதல்கட்ட விசாரணையில், இந்த கொலை சம்பவம் நன்கு திட்டமிட்டு செய்யப் பட்டிருப்பது தெரியவந்துள்ளது. நாடியா மாவட்டம், வங்க தேசத்தை ஒட்டிய பகுதி என்பதால், கொலையாளிகள் தப்பிவிடாமல் தடுக்க கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளளனர்.
முன்னாள் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யான முகுல் ராய், அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான மம்தா பானர்ஜியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு பாஜகவில் இணைந்தார். அதனால் போலீசாரின் இந்த நடவடிக்கை.. அரசியல் பழிவாங்கும் செயல் என்று முகுல் ராய் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், திரிணாமுல் காங்கிரசில் நிலவும் உட்கட்சி பூசல் தான் கொலைக்கு காரணம். சத்யஜித் சுடப்படும்போது அவரை சுற்றி ஏராளமான கட்சியினரும் இருந்துள்ளனர். அப்படியிருக்கும்போது, கொலையாளிகள் அவரை நெருங்கியது எப்படி என்று கேள்வியெழுப்பினார்.
இதனிடையே, சத்யஜித் கொலை செய்யப்பட்டதில் பாஜக சதி இருப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் பொதுச் செயலர் பார்த்தா சட்டர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,லோக் சபா தேர்தல் நெருங்குவதால், மேற்கு வங்கத்தில் பிரச்னைகளை ஏற்படுத்தி, அதன் மூலம் அரசியல் ஆதாயம் அடைய பாஜக முயற்சிக்கிறது என்றார்.