மமதாவின் ஆட்சிக்கு பேராபத்து... சொன்னதை செய்து விடுமா பாஜக? உடையும் திரிணாமுல் காங்.?
Recommended Video
கொல்கத்தா: லோக்சபா தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள பாஜக மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை உடைத்து ஆட்சியைக் கவிழ்க்கக் கூடும் என அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள், திரிணாமுல் காங்கிரஸ் என்ற நிலைமைதான் இருந்து வந்தது. இடதுசாரிகளுக்கு முடிவுரை எழுதினார் மமதா பானர்ஜி.
இதனால் தீரா வெறியில் இருக்கும் இடதுசாரிகள் பரம எதிரியான, தத்துவார்த்த எதிரியான பாஜகவுடன் கூசாமல் கை கோர்த்துக் கொண்டனர். லால்சலாம் என முழங்கியவர்கள் ஜெய் ஸ்ரீ ராம் என காவி கொடியை தூக்கிப் பிடித்தார்கள்.
கடந்த முறை போல் எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை இழந்த காங்கிரஸ்..எதிர்க்கட்சித் தலைவர் இல்லாத லோக்சபா
மமதாவின் எதிரிகள்
இதன்விளைவு மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 42 சட்டசபை தொகுதிகளில் பாதியை கபளீகரம் செய்தது பாஜக. இரண்டு எதிரிகளும் கை கோர்த்து மூர்க்கமாக தாக்கியதில் நிலைகுலைந்துதான் போயிருக்கிறார் மமதா பானர்ஜி.
மோடியின் குதிரை பேர பேச்சு
இப்போது மத்தியில் விஸ்வரூபமாக அரியாசனத்தில் தொடருகிறது பிரதமர் மோடி. இதேபிரதமர் மோடிதான், மேற்கு வங்க தேர்தல் பிரசாரத்தில் பேசுகையில், 40 திரிணாமுல் எம்.எல்.ஏக்கள் எங்களுடன் தொடர்பில் இருக்கிறார் என பெரும் குண்டை வீசியிருந்தார்.
திரிணாமுல் உடைகிறது?
இதை நிஜமாக்கும் வகையில் பாஜக வியூகங்களை வகுக்கலாம் என்பதுதான் வரலாற்றின் பக்கங்கள் சொல்லும் சேதி. திரிபுராவில் இடதுசாரிகளை வீழ்த்த ஒட்டுமொத்தமாக காங்கிரஸையே தம் பக்கம் இழுத்துக் கொண்டது பாஜக. மேற்குவங்கத்தில் எதிரிக்கு எதிரி நண்பன் என அதே இடதுசாரிகளை தன்வயப்படுத்திக் கொண்டது பாஜக. அந்த கட்சியை மூர்க்கமாக எதிர்க்கும் மமதாவின் அரசு நீடிப்பதை நிச்சயம் பாஜக விரும்பாது. பிற மாநிலங்களில் செய்த அதே செப்படி வித்தையான அனைவரையும் விலைபேசு தத்துவத்தை விரைவில் மேற்கு வங்கத்தில் அரங்கேற்ற வாய்ப்பிருக்கிறது.
திரிணாமுல் எம்.எல்.ஏக்கள் தாவினால்
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மேற்கு வங்க பாஜக துணைத் தலைவர் ஜெயபிரகாஷ் மஜூம்தார், இடதுசாரிகள் தத்துவார்த்த அறிவு கொண்டவர்கள். ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் அதிகாரப் பசி கொண்டவர்கள். அதனால் அதிகாரத்தின் பக்கம் அவர்கள் எளிதாக சாய்ந்துவிடலாம். திரிணாமுல் எம்.எல்.ஏக்கள் எங்கள் பக்கம் சாய்ந்துவிட்டால் மேற்கு வங்கமும் எங்கள் கோட்டை என கூறியிருக்கிறார். இதனால் மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் அரசாங்கம் இன்னமும் 2 ஆண்டுகாலம் நீடிக்குமா? என்கிற கேள்விக்குறியும் எழுந்துள்ளது.