பீகார் சட்டசபை தேர்தல்: நிதிஷை ஓரம் கட்ட லாலு முயற்சி.. முதல்வர் வேட்பாளர் பஞ்சாயத்தில் பா.ஜ.க.!!
பாட்னா: பீகார் சட்டசபைக்கான தேர்தல் இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறலாம் என்ற நிலையில் அம்மாநிலத்தில் நாள்தோறும் அரசியல் அரங்கில் திருப்பம் தரும் காட்சிகளே அரங்கேறிவருகின்றன... சக கூட்டணிக் கட்சிகளை ஓரம்கட்டிவிட்டு தங்களது செல்வாக்கை வளர்க்க இதர கட்சிகள் மேற்கொள்ளும் வியூகங்களால் பீகார் அரசியல் பரபரப்பாக இருக்கிறது.
பீகாரைப் பொறுத்தவரையில் லாலு பிரசாத் யாதவின் ஜனதா தளம், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சி ஆகியவை இணைந்து சட்டசபை தேர்தலை எதிர்கொள்கின்றன.
பாரதிய ஜனதா கட்சியோ ராம்விலாஸ் பாஸ்வான், ராஷ்டிரிய லோக்சமதா கட்சியின் உபேந்திரா குஷாவா மற்றும் முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மஞ்சி ஆகியோருடன் கை கோர்த்து களம் இறங்கிறது.
லாலு பிரசாத்தைப் பொறுத்தவரையில் தேர்தலில் போட்டியிட முடியாத நிலையில் இருக்கிறார்... லாலு குடும்பத்தில் நிதிஷ்குமாருக்கு போட்டி போடும் அளவுக்கு சக்திமிக்க நபர்கள் இல்லை..
லாலுவின் உள்ளடி
என்னதான் நிதிஷ்குமாரை முதல்வர் வேட்பாளராக ஆதரித்தாலும் நிதிஷ்குமாரின் கை பீகாரில் ஓங்குவதில் லாலு ரசிக்கப் போவதில்லை என்றே கூறப்படுகிறது.. நிச்சயமாக நிதிஷ்குமாரை முதல்வராக்குவதில் முட்டுக்கட்டை போடவே செய்வார் லாலு எனவும் கூறப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஞாயிறன்று நிதிஷ்குமாருடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். காங்கிரஸைப் பொறுத்தவரையில் பாரதிய ஜனதாவுக்கு எதிரான வலுவான அணியை உருவாக்க முடியும் என கருதுகிறது.
லாலுவை ஓரம்கட்ட முயற்சி?
லாலுவை ஓரங்கட்டிவிட்டு நிதிஷ்குமாரும் காங்கிரஸும் கை கோர்க்கவும் வாய்ப்பிருக்கிறது. லாலுவோ நிதிஷ்குமாரை கழற்றிவிட்டு மாஞ்சியின் புதிய கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் கரம் கோர்க்கவும் வாய்ப்பிருக்கிறது.
ஒருவேளை நிதிஷ்குமார்-லாலு- காங்கிரஸ் கட்சி என கூட்டணி அமைந்தாலும் லாலுவைப் பொறுத்தவரையில் 100 தொகுதிக்கும் அதிகமாகவே கேட்பார். அப்படி தொகுதிகள் கிடைக்காத நிலையில் நிதிஷின் ஐக்கிய ஜனதா தளத்துக்கு எதிராக வேட்பாளரை லாலு நிறுத்துவார்.
பாஜகவின் ப்ளான்
பாரதிய ஜனதாவைப் பொறுத்தவரையில் பெரும்பான்மை யாதவ சமூக வாக்குகளை அள்ளுவதில் குறியாக இருக்கிறது. 5 முறை எம்பியான பப்பு யாதவை தளபதியாக்கிக் கொள்ள பாரதிய ஜனதா விரும்புகிறது. இவரது யாதவ சமூகத்தின் யுவ சக்தி இயக்கத்தை பாரதிய ஜனதா பெரிதும் நம்பியுள்ளது.
இந்த பப்பு யாதவ், லாலுவின் கட்சியில் இருந்து வெளியேறியவர்..தற்போது லாலுவின் அரசியல் எதிர்காலத்துக்கு பெரிய சவாலாக இருந்தும் வருகிறார்..
அதேபோல் நிதிஷ்குமாரிடம் இருந்து வெளியேறிய மாஞ்சியையும் பாரதிய ஜனதா தம் வசமாக்கிக் கொண்டு தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறது. மாஞ்சிக்கு மகாதலித்துகளின் ஆதரவு இருக்கிறது; அது தங்களுக்கே கிடைக்கும் என்பது பாரதிய ஜனதாவின் கணக்கு.
முதல்வர் வேட்பாளர் பஞ்சாயத்து
இருப்பினும் பாரதிய ஜனதா அணியிலும் யார் முதல்வர் வேட்பாளர் என்ற குழப்பத்துக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது. ராம்விலாஸ் பாஸ்வானை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று அவரது சகோதரர் ராமச்சந்திர பாஸ்வான் கூறிவருகிறார். முன்னர் வாஜ்பாய், பாஸ்வானை முதல்வராக்க விரும்பியதாகவும் அவர் கூறி வருகிறார்.
மற்றொரு கூட்டணி கட்சியான ராஷ்டிரிய லோக்சமதா கட்சியோ அதன் தலைவர் உபேந்திராவையே முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று கலகக் குரல் எழுப்பியுள்ளது.
ஒட்டுமொத்தமாக பீகார் தேர்தலில் என்னதான் கூட்டணிகள் அமைந்தாலும் எந்த ஒரு கட்சியும் சக கூட்டணி கட்சியை நம்பிக் கொண்டே இருக்கமால் தங்களது இருப்புக்கான வழிகளை மட்டுமே வியூகமாக்கி வருகிறது என்பதே நிதர்சனம்!!