நிதிஷ், லாலுவுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்த பா.ஜ.க. எம்.பி. சத்ருகன் சின்ஹா- நிதிஷுக்கு புகழாரம்!!
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தல் அபார வெற்றி பெற்று மீண்டும் முதல்வராகியுள்ள ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ்குமாரை பா.ஜ.க. எம்.பி. சத்ருகன் சின்ஹா இன்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மிக உன்னதமான தலைவரான நிதிஷ்குமார் நல்ல நிர்வாகத்தை தருவார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பீகார் சட்டசபை தேர்தல் தேதி அறிவித்தது முதல் பா.ஜ.க. தலைமையுடன் மோதி வருகிறவர் அக்கட்சியின் மூத்த தலைவரான எம்.பி. சத்ருகன் சின்ஹா. பீகார் சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்று கொடிபிடித்தவர்.
.@ShatruganSinha meets @NitishKumar after #BiharResults #PhotoBlog pic.twitter.com/l0UH4UZYvc
— India Today (@IndiaToday) November 9, 2015
பீகாரில் திடீரென பிரசார கூட்டங்களை பிரதமர் மோடி ரத்து செய்த போது, இது வாக்காளர்களிடம் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என எச்சரித்தவர். எதிர்க்கட்சியாக இருந்த போதும் நிதிஷ்குமாருடன் நெருக்கமாக இருந்ததால் பா.ஜ.க. கடும் கோபத்தில் இருக்கிறது.
இந்நிலையில் இன்று பாட்னாவில் நிதிஷ்குமாரை நேரில் சந்தித்து கட்டித் தழுவி வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார் சத்ருகன் சின்ஹா. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சத்ருகன் சின்ஹா, இது தனிப்பட்ட முறையிலான சந்திப்பு. இது பா.ஜ.க.வை சங்கடப்படுத்தாது. அப்படி பா.ஜ.க. சங்கடமாக நினைத்தால் நான் கட்சியில் இருக்க முடியாது.
நான் பாரதிய ஜனதாவுக்கு எதிரி அல்ல. அக்கட்சிக்காக பல ஆண்டுகாலம் உழைத்திருக்கிறேன். நிதிஷ்குமார் உன்னதமான தலைவர்.. அவர் நல்ல நிர்வாகத்தை பீகார் மக்களுக்காக தருவார் என்றார்.
இதனைத் தொடர்ந்து லாலு பிரசாத் யாதவையும் சத்ருகன் சின்ஹா சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார்.