முடிந்தால் பாஜக-வின் வெற்றியை தடுத்து பாருங்கள்... மம்தாவிற்கு அமித்ஷா சவால்
கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில், தான் பங்கேற்கும் பிரச்சார கூட்டத்திற்கு தடை விதித்தாலும்,பாஜகவின் வெற்றியை தடுக்க முடியாது என்று அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா கூறினார்.
7 வது கட்டமாக வருகிற ஞாயிற்று கிழமை, மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள, ஒன்பது மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி, தேர்தல் பிரச்சாரம் அனல் பறந்து வருகிறது.
ஜாதவ்பூரில் அமித்ஷா கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், ஜாய்நகர் தொகுதியில் கேனிங் என்ற இடத்தில் நடந்த மற்றொரு பிரச்சார கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். அங்கு அமித்ஷா பேசியதாவது:
அரசு குழப்பம்
மம்தா பானர்ஜி அரசு குழப்பத்தில் இருக்கிறது. என்னை கூட்டங்களில் பங்கேற்க விடாமல் தடுக்க வேண்டும் என்று மம்தா அரசு நினைப்பதாக தோன்றுகிறது. என்னை தடுக்கலாம். ஆனால், இந்த மாநிலத்தில் பா.ஜனதாவின் வெற்றியை அவரால் தடுக்க முடியாது. வங்காளதேசத்தில் இருந்து இங்கு ஊடுருவியவர்கள் கரையான் போன்றவர்கள். நாட்டின் வளங்களை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அவர்களை வெளியேற்றுவோம் என்றார்.
ஜாலியாக பேசக் கூடிய ராஜேந்திர பாலாஜியே கோபமாகிட்டாரே.. கமல் பேச்சால் ஏற்பட்ட கசமுசா!
அத்தை-மருமகன் ஊழல்
மேற்கு வங்காளத்தில் சிண்டிகேட் ராஜ்யத்தை மம்தா நடத்தி வருகிறார். அவருடைய மருமகன் அபிஷேக் பானர்ஜியின் நலனுக்காக திரிணாமுல் காங்கிரஸ் பணியாற்றி வருகிறது. முன்பு, சிண்டிகேட் வரி இருந்தது. தற்போது, மருமகன் வரியாக மாறிவிட்டது. இந்த அத்தை-மருமகன் ஊழல் அரசை நாம் தூக்கி எறிய வேண்டும்.
ஜெய் ஸ்ரீராம்
யாராவது ‘ஜெய் ஸ்ரீராம்' என்று உச்சரித்தால் மம்தா பானர்ஜி கோபப்படுகிறார். இப்போது நான் ‘ஜெய் ஸ்ரீராம்' என்று கோஷமிடுகிறேன். அவருக்கு தைரியம் இருந்தால், என்னை கைது செய்யட்டும். நான் நாளை கொல்கத்தாவில்தான் இருப்பேன்.
விளக்கம்
இதற்கிடையே, ஜாதவ்பூரில் அமித் ஷா பங்கேற்க இருந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு தாங்கள் காரணம் அல்ல என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது. கூட்டத்துக்கு போதிய ஆட்கள் வரமாட்டார்கள் என்ற அச்சத்தில் பா.ஜனதாவே ரத்து செய்து விட்டதாக திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பார்த்தா சாட்டர்ஜி கூறினார்.
வாரணாசி தொகுதி
7-ம் கட்ட தேர்தல் (இறுதி கட்ட தேர்தல்) 19-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் 8 மாநிலங்களை சேர்ந்த 59 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடக்கிறது. இந்த தேர்தலில்தான் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடுகிற உத்தரபிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் வாக்குப்பதிவு நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் தேர்தல்
7-ம் கட்ட தேர்தலின்போது தமிழ்நாட்டில் சூலூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் சட்டசபை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை 23-ந் தேதி நடைபெறுகிறது.