மிசோரம் பாஜகவில் கிறிஸ்தவ மிஷினரி அணி உதயம்!
ஐஸ்வால்: மிசோராமிம் இந்துத்துவா கட்சி என்ற அடையாளத்தை மறைப்பதற்காக இளைஞர் அணியைப் போல கிறிஸ்தவ மிஷினரி அணியை உருவாக்கியுள்ளது பாஜக.
வடகிழக்கு மாநிலங்களில் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையினராக உள்ளனர். இதனாலேயே இந்துத்துவா கொள்கையை பேசிவந்த பாஜக அங்கே நிஜமுகத்தை மறைத்து கட்சிகளை வளைத்துப் போட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி வருகிறது.
மிசோரம் மாநிலத்தில் கிறிஸ்தவர்களே பெரும்பான்மையினர். அங்கு பாஜகவால் தலையெடுக்க முடியாமல் தத்தளித்து வந்தது. கடந்த ஆண்டு சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 39-ல் பாஜக போட்டியிட்டது. சக்மா இனத்தவர் வாழும் தொகுதியில் மட்டும் பாஜக வென்றது.
அண்மையில் லோக்சபா தேர்தலில் கூட பாஜகவுக்கு 3-வது இடம்தான் கிடைத்தது. தற்போது இந்துக்களின் கட்சி; கிறிஸ்தவர்களுக்கு எதிரானது என்ற அடையாளத்தை மறைக்க அதிரடியாக ஒரு முடிவை எடுத்திருக்கிறது பாஜக.
அதாவது கட்சியில் இருக்கும் பல்வேறு அணிகளைப் போல கிறிஸ்துவ மிஷினரி அணி ஒன்றையும் மிசோரமில் பாஜக உருவாக்கியிருக்கிறது. லால்ஹிரியதெரங்கா தலைமையில் இந்த மிசினரிகள் அணி அமைக்கப்பட்டுள்ளது.
மிசோ இன மக்கள் மத்தியில் லால்ஹிரியதெரங்கா நல்ல செல்வாக்கு உள்ளது. லோக்சபா தேர்தலில் போட்டியிட இவருக்கு பாஜக வாய்ப்பு தந்தது. ஆனால் இதை ஏற்க லால்ஹிரியதெரங்கா மறுத்து சுயேட்சையாக போட்டியிட்டார். இந்த நிலையில் திடீரென பாஜகவில் ஐக்கியமான லால்ஹிரியதெரங்கா தலைமையில் கிறிஸ்தவ மிஷினரி அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மிசோரம் பாஜக தலைவர் ஜேவி ஹூலுனா கூறுகையில், கிறிஸ்தவ மக்களுக்கு எதிரான கட்சியாக பாஜகவை சித்தரிக்கின்றனர். மிசோரமில் அனைத்து தேவாலயங்களிலும் பாஜகவை இப்படியாகத்தான் கருதுகின்றனர். இதனை மாற்றுவதற்காகவே கிறிஸ்துவ மிஷனரிகள் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
பாஜகவும் கிறிஸ்தவர்களின் நண்பர்கள்தான் என்பதை விளக்கும் வகையில்தான் இந்த அணி அமைக்கப்பட்டுள்ளது. நாங்கள் மதச்சார்பற்ற சக்தி என்பதை மிசோரம் மக்களுக்கு தெரியப்படுத்த விரும்புகிறோம் என்றார்.