வாஜ்பாய்க்கு பாரத ரத்னா கொடுங்க ப்ளீஸ்... பாஜக, சிவசேனா கோரிக்கை
டெல்லி: முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது அளிக்க வேண்டும் என்று பாஜக, சிவசேனா தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மூத்த பாஜக தலைவர் முரளி மனோகர் ஜோஷி கூறுகையில், வாஜ்பாயை விட இந்த விருதுக்குப் பொருத்தமானவர்கள் வேறு யாரும் இல்லை என்று கூறினார்.
மதுரா எம்.பியும், நடிகையுமான ஹேமமாலானி கறுகையில், நமது நாட்டுக்காக, நிறைய செய்துள்ளார் வாஜ்பாய். அவருக்கு இந்த நேரத்தில் பாரதரத்னா விருது கொடுக்கப்பட்டால் அதை விட பாஜகவினருக்கு வேறு சந்தோஷம் இருக்க முடியாது என்றார்.
சிவசேனா தலைவர் ஆனந்த் கீதே கூறுகையில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பாரதரத்னா கெளரவத்துக்கு மிகவும் பொருத்தமானவர். இது எனது கருத்து மட்டும் அல்ல, எனது கட்சியின் கருத்தும் கூட என்றார்.
கடந்த ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருதை அளித்தது. மேலும் விஞ்ஞானி சிஎன்ஆர் ராவுக்கும் இந்த விருது அளிக்கப்பட்டது.
இது குறித்து கருத்துதெரிவித்திருந்த பாஜக, வாஜ்பாய்க்கு பாரதரத்னா விருது தராமல் காங்கிரஸ் கட்சியும், ஆட்சியும் புறக்கணித்ததை விமர்சித்திருந்தது.
மேலும் பாஜக ஆட்சி அமைந்தால் வாஜ்பாய்க்கு பாரதரத்னா விருது அளிக்கப்படும் என்றும் அப்போது அது கூறியிருந்தது குறிப்பிடத்தக்து.