ராமர் கோவில் விவகாரத்தில் மோடி 'மூச்'... பாஜக 'கப்சிப்'... அயோத்தி கள நிலவரம் என்ன தெரியுமா?
அயோத்தி: தேர்தல்கள் வந்துவிட்டாலே அயோத்தியில் ராமர் கோவிலை கட்டுவோம் என்று கிளம்பிவிடும் பாஜக உள்ளிட்ட இந்துத்துவா சக்திகள் இம்முறை அதை கைவிட்டுவிட்டு தேசநலன், தேசபாதுகாப்பு என பேசி வருகின்றன. அயோத்தியை உள்ளடக்கிய் ஃபைசாபாத் தொகுதிமக்கள் ராமர் கோவில் விவகாரத்தை கண்டுகொள்ளாமல் போனதும் கோவில் கட்ட என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என கேட்டால் பதில் இல்லாததாலும் இவ்விவகாரத்தில் இம்முறை பாஜக அடக்கி வாசிப்பதாக களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அயோத்தி நகரமானது ஃபைசாபாத் லோக்சபா தொகுதிக்குள் வருகிறது. பெயரை அயோத்தி என உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மாற்றினாலும் தேர்தல் ஆணையத்தில் ஃபைசாபாத் தொகுதிதான்.
அயோத்தியில் ராமர் கோவிலை கட்டியே தீருவோம் என முழக்கமிட்ட பாஜக, 5 ஆண்டுகாலத்தில் அதற்கான துளி கல்லையும் முன்னெடுத்து வைக்கவில்லை. அண்மையில் ராமர் கோவில் கட்டுவதற்கான அவசர சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்கிற கலகக் குரல்கள் வெடித்தன.
பதிலே இல்லையே
ஆனாலும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மவுனியாகவே இருந்தது. தற்போதைய தேர்தல் களத்தில் மீண்டும் ராமர் கோவில் விவகாரத்தை கையில் எடுத்தால், 5 ஆண்டுகாலத்தில் என்னதான் செய்தீர்கள் என எதிர்கேள்விகள் எழும். இதற்கு பதிலளிக்க முடியாது என்பதால் 'எல்லையிலே நமது வீரர்கள் கொட்டும் பனியில்... வாட்டும் வெயிலில்' என கோரஷாக முழங்குகின்றனர். அங்கேயும் ஓட்டைகள் இருக்கின்றன என்பதை நாட்டு மக்கள் புல்வாமாவிலும் நேற்றைய கட்ச்ரோலியும் நடந்தவை மூலம் தெரிந்தும் வைத்திருக்கின்றனர் என்பது யதார்த்தம்.
பாஜகவுக்கு சாதகம் இல்லை
அயோத்தியை உள்ளடக்கியதாக ஃபைசாபாத் தொகுதி இருந்தாலும் நாம் நினைப்பது போல் பாஜகவுக்கு சாதகமான தொகுதி அல்ல. இத்தொகுதியில் சமாஜ்வாடி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகள் மட்டுமின்றி கம்யூனிஸ்ட் கட்சியும் கூட வென்றிருக்கிறது. இத்தொகுதியில் போட்டியிட்டு வென்ற மித்ரா சென் யாதவின் தனிப்பட்ட செல்வாக்கு காரணமாக அவர் எந்த கட்சியின் சார்பில் போட்டியிட்டாலும் வெற்றி கிடைத்தது. இத்தேர்தலில் மித்ராசென் யாதவ் காலமானதால் அவரது மகன் அனந்தசென் யாதவை சமாஜ்வாதி-பகுஜன் சமாஜ் கூட்டணி வேட்பாளராக களமிறக்கியுள்ளது.
ஜாதிய வாக்குகள்
கடந்த தேர்தலில் வென்ற லல்லு சிங்கையே பாஜக மீண்டும் வேட்பாளராக நிறுத்தியிருக்கிறது. காங்கிரஸ் கட்சி முன்னாள் எம்.பி. நிர்மல் காத்ரியை வேட்பாளராக்கியிருக்கிறது. இங்கு யாதவர்கள் வாக்குகள் 13%; இஸ்லாமியர்கள் 15%; தலித்துகல்- 4% உயர்ஜாதி இந்துக்கள்-29%. பாஜகவைப் பொறுத்தவரை உயர்ஜாதி இந்துக்களின் வாக்குகளை குறிவைக்கிறது. பகுஜன்சமாஜ்- சமாஜ்வாதி கட்சிகள் இஸ்லாமியர்கள், யாதவர்கள், தலித்துகள் வாக்குகளை அப்படியே அள்ளிவிடுவது என்பதில் உறுதியாக இருக்கிறது.
வாக்குறுதிகளும் காங்கிரஸும்
காங்கிரஸ் கட்சியோ, ஜாதிய வாக்குகள் கை கொடுக்காது; தேர்தல் வாக்குறுதிகள் கை கொடுக்கும் என நம்பிக் கொண்டிருக்கிறது. இத்தேர்தலில் ராமர் கோவில் விவகாரத்தை ஏன் எழுப்பவில்லை என பாஜக வேட்பாளர் லல்லு சிங்கிடம் கேள்வி கேட்டால், எங்களுக்கு தேசியவாதமும் தேசபாதுகாப்பும்தான் முக்கியம். தேசியவாதம் பாதுகாப்பானதாக இருக்கும் போதுதான் கோவிலே கட்டவும் முடியும் என்கிறார்.
ராமர் கோவில் பற்றி பேசாத மோடி
அயோத்தியில் இருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள அம்பேத்கர்நகரில் பிரதமர் மோடி நேற்று பிரசாரம் செய்தார். ஆனாலும் ராமர் கோவில் பற்றி ஒருவார்த்தை கூட கூறாமல் பம்மிவிட்டார். பேச்சை முடிக்கும் போது மட்டும் ஜெய் ஶ்ரீராம் என கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.