உத்தர பிரதேசம் உட்பட 4 மாநிலங்களில் பாஜக ஆட்சி! பஞ்சாப் மட்டும் காங்கிரசுக்கு: இந்தியா டுடே சர்வே
டெல்லி: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில், நான்கு மாநிலங்களில் பாஜக ஆட்சியை கைப்பற்றும் என இந்தியா டுடே கருத்துக் கணிப்பு வெளியிட்டுள்ளது.
இந்தியாடுடே-ஆக்சிஸ் மை இந்தியா அமைப்புகள் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் இத்தகவல் வெளியாகியுள்ளது. மொத்தம் 37 ஆயிரத்து 866 பேரிடம் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் அடுத்த ஆண்டு தேர்தலை சந்திக்க உள்ள நிலையில், இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.
2012 சட்டசபை தேர்தலில் உத்தர பிரதேசத்தில் 15 சதவீத வாக்கு வங்கி வைத்திருந்த பாஜக, இக்கருத்துக் கணிப்புபடி தற்போது 31 சதவீதத்திற்கு உயர்ந்துள்ளது. வரலாறு காணாத இந்த மாற்றத்தால், 403 சட்டசபை உறுப்பினர்களை கொண்ட சட்டசபையில் சுமார் 170 முதல் 183 சீட்டுகளை பாஜக கைப்பற்றும் என தெரிகிறது. மெஜாரிட்டிக்கு தேவை 202 சீட்டுகள்.
ஆளும் சமாஜ்வாதி கட்சியின் வாக்கு வங்கி 29 சதவீதத்தில் இருந்து, 25 சதவீதமாக குறைந்துள்ளதாகவும் இந்த கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
உத்தராகண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள, 70 தொகுதிகளில், பாஜக 38 முதல் 43 சீட்டுகளை கைப்பற்றும் எனவும், காங்கிரஸ் கட்சி 2வது இடத்தை பிடிக்கும் எனவும் கருத்துக் கணிப்பு கூறுகிறது.
கோவாவிலுள்ள 40 தொகுதிகளில், ஆளும் பாஜக 17 முதல் 21 தொகுதிகளை கைப்பற்றும் எனவும், காங்கிரஸ் கட்சி 13 முதல் 16 தொகுதிகளை கைப்பற்ற வாய்ப்புள்ளதாகவும் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் மொத்தமுள்ள 60 இடங்களில் பாஜக 31-35 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை பிடிக்கும். காங்கிரஸ் 19 முதல் 24 தொகுதிகளை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அதேநேரம், பஞ்சாப்பில் மட்டும் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க வாய்ப்புள்ளது. மொத்தமுள்ள, 117 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 49 முதல் 55 இடங்களை வெல்ல வாய்ப்புள்ளதாம். ஆச்சரியப்படத்தக்க வகையில் இங்கு 2வது இடம் ஆம் ஆத்மிக்கு. 42-46 சீட்டுகள் வரை ஆம் ஆத்மி கைப்பற்ற வாய்ப்புள்ளது. இக்கட்சிக்கு 30 சதவீத வாக்குகள் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 22 சதவீத வாக்குகளுடன், பாஜக கூட்டணி 17-21 இடங்களை மட்டுமே வெல்ல வாய்ப்புள்ளது.