பாஜகவின் புதிய தயாரிப்பு “காவி குர்தா - டெனிம் ஜீன்ஸ்” – சூடுபிடிக்கும் பேஷன் பிரச்சாரம்!
டெல்லி: டெல்லியில் பாஜக கட்சியின் புதிய முயற்சியாக இளைஞர்களையும் கவரும் வகையில் ஒரு பேஷன் யுத்தத்தில் இறங்கியுள்ளது. அதற்காக ஒரு பேஷன் பிரிகேடையே டெல்லியில் நடத்த உள்ளது பாஜக.
அக்கட்சியின் 50,000 தொண்டர்கள் செங்காவி நிறத்திலான காதி குர்தாவும், டெனிம் ஜீன்ஸும் அணிந்து இந்த பேஷனைத் துவங்கி வைக்க உள்ளனர்.
இதற்கான முக்கிய காரணமாக கூறப்படுவது, பேஷனை மையமாகக் கொண்டு இளம் வேட்பாளர்களைக் கவர்வதுதானாம்.
பேஷன் புரட்சி:
"நாங்கள் இளைஞர்களுடனான எங்களது தொடர்பினை அதிகரித்துக் கொள்ள விரும்புகின்றோம். அதற்கான வழியாக நாங்கள் தேர்ந்தெடுத்துள்ளதுதான் இந்த புதிய "பேஷன்" புரட்சி. இதற்காக நாங்கள் பழமையான குர்தாவினை அறிமுகப்படுத்தப் போவதில்லை.
காவி-பச்சை குர்தா:
அதற்கு பதிலாக புதுமையான வகையிலான குட்டை குர்த்தாக்களையும், டெனிம் ஜீன்ஸ்களையும் அறிமுகப்படுத்த உள்ளோம். இது இளைஞர்களையும் கவரும் வகையிலான முயற்சியாகும்" என்று பாஜகவின் டெல்லி பாஜகவின் செய்தித் தொடர்பாளர் பிரவீன் சங்கர் தெரிவித்துள்ளார்.
இளைஞர்களைக் கவரும் வண்ணம்:
செங்காவியும், பச்சை வண்ணமும் கலந்த அந்த குர்த்தாக்களுடன், நீல வண்ண டெனிம் ஜீன்ஸும் சேர்ந்தால் கண்டிப்பாக இளைஞர்களைக் கவர்ந்தே தீரும் என்று பாஜக கட்சி நம்பிக்கையுடன் கூறுகின்றது. மேலும், இந்த ஸ்டைலானது விரைவில் நாடெங்கும் உரக்க ஒலிக்கும் என்றும் எதிர்ப்பார்க்கின்றது.
டெல்லியில் ஆர்டர்கள்:
இந்த ஆடைகளுக்கான ஆர்டர்களை டெல்லியின் முன்னணி டெய்லர்கள் இருக்கும் சதார் பஜார் பகுதியில் அளிக்க முடிவு செய்துள்ளது. இந்த புதிய ட்ரெண்ட் இளைஞர்களைக் கவரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1000 குர்தாக்களும், தொப்பிகளும்:
"ஒவ்வொரு கலரிலும் 1000 குர்த்தாக்களை சதார் பஜார் போன்ற பகுதிகளில் உள்ள தையல் கலைஞர்களிடம் அளிக்க முடிவு செய்துள்ளோம். மேலும், இதனுடன் செங்காவி மற்றும் பச்சை நிற தொப்பிகளுக்கும் ஆர்டர் அளிக்க முடிவு செய்துள்ளோம்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நேரு ஜாக்கெட் விலை அதிகம்:
"நேரு ஜாக்கெட்கள் மிகவும் விலை உயர்ந்தவை. அவை ஒன்றே 1000 ரூபாயிலிருந்து 1500 வரை விலையாகின்றது. அதற்கு பதிலாக இந்த குர்த்தாக்கள் வடிவமைப்பு அமையும்.
விலை கம்மிதான்:
இவற்றின் ஒன்றின் விலை 400 ரூபாயிலிருந்து 450 ரூபாய் வரைதான் ஆகும். தொப்பியின் விலையும் 20 ரூபாய்தான் ஆகும்" என்றும் தெரிவித்துள்ளார்.
உண்மையான பலம் இளைஞர்கள்:
இந்த பிரச்சரம் குறித்து தெரிவித்துள்ள டெல்லி பாஜகவின் தலைவரான சதீஷ் உபத்யாய், "இளைஞர்கள்தான் கட்சியின் உண்மையான பலம். அவர்களை கட்சியில் இணைத்தால், கட்சிக்கும், நாட்டிற்கும் பெரும் பலமாக அமையும்" என்று தெரிவித்துள்ளார்.
மொத்தத்தில் மோடி அலைக்குப் பிறகு இளைஞர்களின் "ஆடை" அலைதான் பாஜகவின் புதிய தேர்தல் யுக்தி போல!