கவிழும் ராஜஸ்தான் அசோக் கெலாட் தலைமையிலான காங். அரசு- சச்சின் பைலட்டுடன் பாஜக மும்முர பேச்சுவார்த்தை
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் அரசு எந்த நேரத்திலும் கவிழும் அபாயத்தில் உள்ளது. ஆட்சியை கவிழ்க்க மாநில துணை முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சச்சின் பைலட்டுடன் பாஜக தரப்பு மும்முரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம்.
200 எம்.எல்.ஏக்களைக் கொண்ட ராஜஸ்தான் சட்டசபைக்கு 2018-ல் தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி 107 இடங்களில் வென்று ஆட்சியை கைப்பற்றியது.
பாஜக 72; சுயேட்சைகள் 12 பேரும் எம்.எல்.ஏக்களாகினர். ராஜஸ்தானைப் பொறுத்தவரையில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு முழு பெரும்பான்மையுடன் இருந்து வருகிறது. ஆனால் இந்த அரசை கவிழ்ப்பதில் பாஜக தொடர்ந்து முயற்சிக்கிறது என்பது காங்கிரஸ் புகார்.
சிந்தியா வழியில் சச்சின் பைலட்?.. ராஜஸ்தானில் காங். ஆட்சியை கவிழ்க்க திட்டமா? உண்மை என்ன?
ஆட்சி கவிழ்ப்பில் மும்முரம்
தமது அரசை கவிழ்ப்பதற்காக ஒவ்வொரு எம்.எல்.ஏவுக்கும் ரூ20 கோடி பேரம் பேசுகிறது பாஜக; ஆட்சியைக் கவிழ்க்க ரூ2,000 கோடி செலவு செய்கிறது பாஜக என்றும் அசோக் கெலாட் குற்றம்சாட்டியிருந்தார். இந்த நிலையில் மத்திய பிரதேசம் பாணியில் அசோக் கெலாட் அரசை கவிழ்ப்பதில் படுதீவிரமாகிவிட்டது பாஜக.
சச்சின் பைலட்டுக்கு வலை வீச்சு
மத்திய பிரதேசத்தில் கமல்நாத்துடன் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தார் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா. அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து கமல்நாத் ஆட்சியை கவிழ்த்து பாஜக அரியணை ஏறியது. இதே பாணியில் ராஜஸ்தானில் கெலாட் மீது அதிருப்தியில் இருக்கும் சச்சின் பைலட்டுக்கு வலைவீசியிருக்கிறது பாஜக.
டெல்லியில் பைல்ட் எம்.எல்.ஏக்கள்
சச்சின் பைலட்டுக்கு 25 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருக்கிறது. இந்த 25 எம்.எல்.ஏக்களும் கூண்டோடு ராஜினாமா செய்தால் கெலாட் அரசு கவிழ்ந்துவிடும். இது தொடர்பாக சச்சின் பைலட்டுடன் தொடர்ந்து பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதனிடையே 25 எம்,எல்.ஏக்களுடன் சச்சின் பைலட் டெல்லியில் முகாமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் மேலிடம் என்ன செய்யும்?
மத்திய பிரதேசம் விவகாரத்தில் காங்கிரஸ் மேலிடம் அமைதியாக வேடிக்கை பார்த்தது. கடைசி நேரத்தில் திடீரென தலையிட முயற்சித்த போது தலைக்கு மேலே வெள்ளம் போய் ஆட்சியே பறிபோனது. இதே பாணியில்தான் ராஜஸ்தானை கையாளப் போகிறதா? அல்லது கெலாட்- பைலட் இடையே சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி பஞ்சாயத்தை முடிவுக்கு கொண்டுவருமா காங்கிரஸ் மேலிடம் என்பதுதான் எதிர்பார்ப்பு.