100 திரிணமூல் எம்எல்ஏக்களுக்கு பாஜக குறியா.. மேற்கு வங்கத்தில் திடீர் பரபரப்பு
கொல்கத்தா: திரிணமுல் காங்கிரசில் உள்ள 100 எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயன்று வருகிறது என்ற தகவல் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
பாஜகவை கடுமையாக எதிர்க்கும் எதிர்கட்சிகளில் முக்கியமானவர் மேற்கு வாங்க மாநில முதல்வர் மம்தா பேனர்ஜி. தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன்னரே அவர் எதிர்கட்சிகளை ஒன்றிணைத்து ஒரு மிகபெரிய பேரணியையும் மாநாட்டையும் நடத்திக் காண்பித்தார். அதோடு பாஜகவுக்கு சிம்ம சொப்பனமாகவும் விளங்கி வருகிறார்.
2014 ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலின்போது மம்தா தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் மொத்தமுள்ள 42 இடங்களில் 34 இடங்களை வென்றது. அந்த தேர்தலில் காங்கிரஸ் 4 இடங்களையும் கம்யூனிஸ்ட் இரண்டு இடங்களிலும் வென்றது. நாடு முழுவதும் மோடி அலை வீசியும், வளர்ச்சியின் நாயகன் மோடி என்று சித்தரித்தும் பாஜகவால் அங்கு இரண்டு இடங்கள் மட்டுமே வெல்ல முடிந்தது.
இப்போது நடைபெறவுள்ள இந்த தேர்தலிலும் பாஜக உ.பி தனக்கு பெரிய அளவில் கை கொடுக்காது என்பதால் பிற மாநிலங்களை குறி வைத்துள்ளது. இம்முறை மேற்கு வங்கத்தில் எப்படியாவது 10 க்கும் அதிகமான தொகுதிகளை வெல்வது என்று வியூகம் வகுத்து வேலை செய்து வருகிறது. இந்த நிலையில் திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அர்ஜூன் சிங் - ற்கு குறிவைத்து காய் நகர்த்தியது பாஜக இதில் அர்ஜூன் சிங் சமீபத்தில் பாஜகவில் இணைந்து விட்டார். தற்போது அவர் பாஜக சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறார்.
நேருவும், இந்திராவும்தான் அடிப்படை காரணம்.. மிஷன் சக்தி.. மோடிக்கு செக் வைக்கும் காங்கிரஸ்
மக்களவைத் தேர்தலுக்கான் வியூகம் ஒருபுறம் என்றால் சட்டப் பேரவையையும் கைப்பற்ற பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. திரிணமுல் காங்கிரசை சேர்ந்த 100 எம்.எல்.ஏ.க்களை பாஜகவில் இணைக்க பல்வேறு முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இது குறித்து சமீபத்தில் பாஜகவில் இணைந்த திரிணமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் அர்ஜூன் சிங் பேசுகையில் திரிணமுல் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் பாஜகவில் இணைய உள்ளனர். அதோடு 100 எம்.எல்.ஏ.க்களும் பாஜகவில் இணைய உள்ளனர். இது குறித்து பாஜக தலைவர்களிடமும் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்த எம்.எல்,ஏக்களில் பலர் மக்களவைத் தேர்தலுக்கு முன்னர் திரிணமுல் காங்கிரசில் இணையக் கூடும் என்றும் வேறு சிலர் மக்களவைத் தேர்தலுக்கு பின்னர் இணைவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். இதனால் தேர்தல் நடத்தாமலே திரிணமுல் ஆட்சியை கவிழ்த்து விட்டு பாஜக ஆட்சியமைக்க வாய்ப்புள்ளது என்று அர்ஜூன் சிங் கூறியுள்ளார். ஆக கர்நாடக மாநிலத்தை போல பாஜகவின் ஆட்டம் மேற்கு வங்கத்திலும் ஆரம்பித்து விட்டது. ஆனால் மம்தா பேனர்ஜி அவ்வளவு எளிதாக இந்த ஆட்டத்தை விட்டுவிடுவாரா என்பதுவும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.