உ.பி.யில் ஜாதிய வாக்குகளை 'லம்ப்பா' அள்ள பக்கா ப்ளான் போடும் அமித்ஷா
லக்னோ: உத்தரப்பிரதேச சட்டசபைக்கான தேர்தல் வியூகங்களை மும்முரமாக செயல்படுத்த தொடங்கிவிட்டார் பாரதிய ஜனதா கட்சி தேசியத் தலைவர் அமித்ஷா. சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற இருந்தாலும் ஜூன் மாதமே பிரசாரத்தை தொடங்குகிறது பாரதிய ஜனதா கட்சி.
உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் எப்படியும் வென்று ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்பதில் மும்முரமாக இருக்கிறது பாஜக. அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா இதற்கான வியூகங்களுடன் களமிறங்கியுள்ளார்.
உ.பி. தேர்தல் களத்தில் பிரதான எதிரிகளாக மோதுவது ஆளும் சமாஜ்வாடி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும்தான்... யாதவ் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட சமூக வாக்குகளையும் 18% முஸ்லிம் வாக்குகளையும் சமாஜ்வாடி கட்சியும் தலித்துகள் வாக்குகளை பகுஜன் சமாஜ் கட்சியும் அறுவடை செய்யும்.
காங்கிரசால் சாதகம்
காங்கிரஸ் கட்சியும் தேர்தல் களத்தில் கணிசமான இடங்களுக்காக போராடும். அப்படி பாரதிய ஜனதாவுக்கு எதிரான மதச்சார்பற்ற வாக்குகளை காங்கிரஸ் கட்சியும் ஓரளவுக்கு பிரித்தால் நிச்சயம் அது பாஜகவுக்கு சாதகமாகிவிடும். இதைத்தான் பாஜகவும் விரும்புகிறது.
ஜாதி வாக்குகளை குறிவைத்து
இதைத் தவிர 24% உயர்ஜாதி வாக்குகள், நகர்ப்புற வாக்குகள் ஆகியவற்றை அப்படியே அள்ளிவிட்டால் ஆட்சி அமைப்பது எளிதாகிவிடும் என்பது அமித்ஷா கணக்கு. ஜாதிய வாக்குகள் எதனையும் விட்டுவிடக் கூடாது என்பதற்காகவே பாஜகவின் மூத்த தலைவர்கள் களமிறக்கப்படுகிறார்.
உயர்ஜாதி தாக்குர் வாக்குகளை கவருவதற்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங், பிற்படுத்தப்பட்டோர் வாக்குகளை பிரிக்க மாநில பாஜக தலைவர் கேசவ் பிரசாத் மவுரியா ஆகியோர் இத்தேர்தலில் முன்னிறுத்தப்பட உள்ளனர். ஜாட்கள், குர்மிகள், லோதிகள், ராஜ்வார், பிந்த், நிஷாந்த், மவுரியா மற்றும் குஷாவாக்கள் ஆகிய ஜாதியினர் தங்களைத்தான் ஆதரிப்பார்கள் என கணக்குப் போடுகிறது பாஜக.
பிரசாரம் தொடங்குகிறது
இது ஒருபுறம் இருக்க ஜூன் 15-ந் தேதியன்று அலகாபாத், கான்பூர், லக்னோ, கோரக்பூர், பைரெய்லி ஆகிய 5 இடங்களில் தீவிர பிரசாரத்தைத் தொடங்குகிறார் அமித்ஷா. மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்கும் ஜூன் மாதம் பிரசாரத்தைத் தொடங்குகிறார். அமித்ஷா, ராஜ்நாத்சிங் கூட்டங்களுக்கு குறைந்தது 25,000 முதல் 30,000 பேரை திரட்டுவதற்கு திட்டமிட்டுள்ளனர். பீகாரைப் போல உத்தரப்பிரதேசத்தில் நிறைய பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். காங்கிரஸ் பிரசாரத்தை முன்னெடுப்பதற்கு முன்னதாகவே களத்தில் இறங்கிவிடுவது என திட்டமிட்டுள்ளது பாஜக.
தனி டீம்
இவை அல்லாமல் உத்தரப்பிரதேச தேர்தலுக்காகவே தனி சோசியல் மீடியா டீமை உருவாக்கியுள்ளது பாஜக. இந்த தேர்தலில் போட்டியிட டிக்கெட் கேட்பவர்கள் குறைந்தபட்சம் தங்களுடைய சோசியல் மீடியா பக்கங்களில் 25,000 பாலோயர்ஸ் வைத்திருக்க வேண்டுமாம்.. கட்சி தொண்டர்கள் நாள்தோறும் கட்சி அலுவலகங்களுக்கு வந்து அட்டெண்டன்ஸ் போடுவதை கட்டாயமாக்குகிறது பாஜக.
சர்வே நடத்தும் குஜராத் டீம்
30,000 கார்களில் பாஜக ஸ்டிக்கர், கொடிகள் பறக்க விடப்படுகிறது. ஏற்கனவே 10 லட்சம் சுவர்களில் விளம்பரங்கள் செய்யப்பட்டுவிட்டன. அத்துடன் அமித்ஷாவின் குஜராத் டீம் ஒன்று உத்தரப்பிரதேசத்தில் முகாமிட்டு தொகுதிகளில் சர்வே நடத்தி நிலவரங்களை நேரடியாக தர உள்ளது.
அஜித்சிங் எம்பி?
இப்படி பாஜக ஒருபக்கம் வியூகம் வகுத்து செயல்பட்டுக் கொண்டிருக்க சப்தமே இல்லாமல் சமாஜ்வாடியும் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ராஷ்டிரிய லோக் தள் தலைவர் அஜித்சிங் டெல்லியில் முலாயம்சிங் யாதவை சந்தித்துப் பேசினார். இதனைத் தொடர்ந்து மூத்த சமாஜ்வாடி கட்சித் தலைவரும் பொதுப்பணித்துறை அமைச்சருமான சிவ்பால் யாதவும் அஜித் சிங்கை நேரில் சந்தித்து பேசினார்.
இச்சந்திப்புகளைத் தொடர்ந்து அஜித்சிங்கை ராஜ்யசபா எம்.பி.யாக்க சமாஜ்வாடி கட்சி ஆதரவு தரும் என கூறப்படுகிறது. இருந்தபோதும் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலில் பிற்படுத்தப்பட்ட சமூக வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் அறுவடை செய்தாக வேண்டும் என்ற சமாஜ்வாடி கட்சியின் திட்டம்தான் இதற்கு பின்னணியில் இருக்கிறதாம்.
இப்பவே களைகட்டுதே!