பாஜக அணியா? 3வது அணியா? என்ன செய்யப் போகிறார் ஜெ.
டெல்லி: லோக்சபா தேர்தலுக்குப் பின் பாரதிய ஜனதா அணி அல்லது அதற்கு எதிரான இடதுசாரிகள் அமைக்கும் மூன்றாவது அணியில் இணைந்து கொள்ள ஏதுவாக வியூகம் வகுத்து காத்திருக்கிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.
லோக்சபா தேர்தலில் மாநிலக் கட்சிகள் கை ஓங்கும் என்றே கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதனால் நாட்டின் பிரதமர் கனவில் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் அதிமுக கடந்த 2 ஆண்டுகாலமாக அடுத்த பிரதமர் ஜெயலலிதாதான் என்று பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. இதனாலேயே 40 தொகுதிகளையும் வெல்வோம் என்ற முனைப்பில் அதிமுக வியூகம் வகுத்து செயல்படுகிறது.
கருத்து கணிப்புகளில் அதிமுகவுக்கு சாதகம்
இதற்கேற்ப கருத்துக் கணிப்புகளும் கூட அதிமுக 28 இடங்கள் வரை கைப்பற்றக் கூடும் என்று தெரிவித்து வருகிறது. இந்நிலையில் ஜெயலலிதா எந்த அணிபக்கம் போவார் என்ற கேள்வி அரசியல் அரங்கில் தொக்கியே நிற்கிறது.
இடதுசாரிகளுடன் இணக்கமான போக்கு
ஜெயலலிதாவைப் பொறுத்தவரையில் தற்போது இடதுசாரிகளுடன் இணக்கமாக இருக்கிறார். லோக்சபா தேர்தலிலும் கூட இடதுசாரிகளுடன் இணைந்து தேர்தலை சந்திப்பார் என்றே கூறப்படுகிறது. ஆனால் தேர்தலுக்குப் பின்னர் அவர் இடதுசாரிகள் அணியிலேயே நீடிப்பாரா என்பதை உறுதியாக சொல்ல முடியாது.
அதிமுகவை நாடப் போகும் பாஜக
அடுத்து நமது ஆட்சிதான் என்று நம்பிக்கையில் இருக்கிறது பாரதிய ஜனதா. ஆனால் அந்த கட்சிக்கு அதிக இடங்கள் கிடைத்தாலும் ஆட்சி அமைக்க கூட்டணி கட்சிகளின் உதவி தேவை. அப்படி ஒரு நிலைமை உருவாகும் போது நிச்சயமாக பாஜக, அதிமுகவின் உதவியை கேட்க தயங்காது. ஆனால் அதிமுக உடனே ஆதரவு அளித்துவிடாது.
3வது அணி பிரதமர் வேட்பாளர்
ஏனெனில் 3வது அணி ஆட்சி அமைக்க வாய்ப்பிருந்தால் நிச்சயம் தம்மையே பிரதமர் வேட்பாளராக அறிவிப்பார்கள் என்ற நம்பிக்கையோடு காத்திருப்பவர் ஜெயலலிதா.
துணை பிரதமர் பதவி?
ஒருவேளை மூன்றாவது அணியில் "பிரதமர் வேட்பாளர்கள்" பெருகி போட்டி வந்துவிட்டால் சமரசமின்றி பாஜகவை ஆதரிப்பதுடன் துணை பிரதமர் போன்ற பொறுப்பை ஜெயலலிதா பெறவும் திட்டமிடக் கூடும்.
எல்லாத்தையும் ஏற்க தயாராகும் இடதுகள்
இதை உணர்ந்துதான் என்னவோ, பாரதிய ஜனதா ஆதரவுடன் ஜெயலலிதா பிரதமரானாலும் சந்தோஷம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியன் கூறியிருந்தார். அதிமுகவை தங்களது அணியில் தக்க வைத்துக் கொள்ள இடதுசாரிகள் ஜெயலலிதாவையே பிரதமர் வேட்பாளராக்க பகீரத பிரயத்தனம் செய்வார்கள்...
ஜெ.வை ஏற்பார்களா?
ஜெயலலிதாவை இடதுசாரிகள் ஏற்றுக் கொண்டது உறுதியான ஒன்று... ஆனால் பிரதமர் கனவில் வலம் வரும் மற்றவர்கள் ஏற்பார்களா? என்பதுதான் அரசியல் அரங்கில் தற்போதைய கேள்வி..