மேற்கு வங்கத்தில்... பாஜக-திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் மோதல்... பலர் காயம்!
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ்-பாஜக தொண்டர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்தனர். போலீசார் அங்கு சென்று நிலையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மேற்கு வங்கத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு ஆட்சியை பிடிக்க பாஜக தீவிரமாக உள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை தக்க வைக்க முயன்று வருகிறது.
மேற்கு வங்க மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு அரசியல் களம் தற்போதே சூடுபிடித்துள்ளது. அங்கு ஆட்சியை தக்க வேண்டும் என ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தீவிரமாக உள்ளது.இந்த முறை மேற்கு வங்கத்தில் கண்டிப்பாக ஆட்சி அமைக்க வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. இதற்காக பாஜக வியூகம் வகுத்து வருகிறது.
அண்மையில் அங்கு அரசியல் பயணம் சென்ற அமித்ஷா, மாநில முதல்வர் மம்தா பானர்ஜியின் ஆட்சியை கடுமையாக விமர்சனம் செய்தார். மம்தா பானர்ஜி, அமித்ஷாவுக்கு தக்க பதிலடி கொடுத்தார். இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் இன்று பாஜக-திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த மாநிலத்தின் பூர்பா மெடினிபூர் மாவட்டம் ராம்நகர் சாலையில் உள்ள திரிணாமுல் கட்சி அலுவலகம் அருகே பாஜக கட்சியினர் ஊர்வலம் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது இந்த மோதல் ஏற்பட்டது. பாஜக-திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இதில் பலர் காயமடைந்தனர், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். ஊர்வலமாக செல்லும்போது டி.எம்.சி கட்சியினர், தங்கள் கட்சித் தொழிலாளர்களை தாக்கியதாக பாஜகவும், பாஜக தங்களது கட்சி அலுவலகத்தை அடித்து நொறுக்கியதாகவும், அங்கு இருந்த தொழிலாளர்களை தாக்கியதாக திரிணாமுல் காங்கிரசும் பரஸ்பரம் குற்றம்சாட்டி உள்ளனர்.