ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்: டோணியை களமிறக்குகிறது பாஜக?
ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் கிரிக்கெட் வீரர் டோணியை களமிறக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீரை நிறுத்தி வெற்றி பெற செய்தது பாஜக. இதே பாணியை தற்போது ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலை கையில் எடுத்திருக்கிறது பாஜக.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளைத் தொடர்ந்து அனேகமாக டோணி தமது ஓய்வை அறிவிக்க வாய்ப்பிருக்கிறது. இந்த அறிவிப்பு வெளியான உடனேயே அவர் பாஜகவில் இணைவார் எனவும் கூறப்படுகிறது.
ஜார்க்கண்ட் மாநில சட்டசபைக்கான தேர்தல் வரும் டிசம்பரில் நடைபெற உள்ளது. அதனால் டோணியை பாஜக களமிறக்கும் என்கின்றன அக்கட்சி வட்டார தகவல்கள்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஜார்க்கண்ட் பாஜக நிர்வாகிகள், டோணியுடன் தொடர்பில் இருந்து வருகிறோம். பிரதமர் மோடிக்கு இருக்கும் செல்வாக்கு டோணிக்கும் இருக்கிறது. ஆகையால் டோணியை தேர்தலுக்கு பயன்படுத்துவோம் என்கின்றனர்.