20 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா... கர்நாடகா பாணியில் ம.பி.யில் ஆட்சியை அபகரிக்கிறது பாஜக!
போபால்: ஜோதிராதித்யா சிந்தியாவின் 20 ஆதரவு எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்திருப்பதன் மூலம் மத்திய பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்கிறது. கர்நாடகா பாணியில் மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றும் வாய்ப்புகள் அதிகமாகி உள்ளன
Recommended Video
மத்திய பிரதேசத்தில் கமல்நாத் அரசுக்கு எதிராக காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை பாஜக வளைத்தது. ஆனால் இதனை வெற்றிகரமாக எதிர்கொண்டார் கமல்நாத். தற்போது கமல்நாத்துக்கு எதிராக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிராதித்யா சிந்தியாவை பாஜக வளைத்துள்ளதால் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் கமல்நாத்துக்கு எதிராக 20 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர். இதனால் முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்கிறது. கர்நாடகா பாணியில் பாஜக அதிரடியாக ஆட்சியை அமைக்க உள்ளது.
மத்திய பிரதேசத்தில் உச்சகட்ட பரபரப்பு.. 6 அமைச்சர்கள் உட்பட 16 காங். எம்எல்ஏக்கள் பெங்களூர் சென்றனர்
20 காங். எம்.எல்.ஏக்கள் ராஜினாமா
சிந்தியாவை ஆதரிக்கும் 20 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், கர்நாடகா பாணியில் ராஜினாமா செய்துள்ளனர். இவர்களில் 17 பேர் பெங்களூருவில் முகாமிட்டுள்ளனர். இந்த ராஜினாமா மூலம் கமல்நாத் அரசை பெரும்பான்மை இழக்கச் செய்து ஆட்சி அதிகாரத்தை பாஜக கைப்பற்ற உள்ளது. கர்நாடகாவில் எப்படி ஆட்சி கவிழ்ப்பு நடந்தது என்பதை முதலில் பார்ப்போம்.
கர்நாடகாவில் நடந்தது என்ன?
224 இடங்களைக் கொண்டது கர்நாடகா சட்டசபை. இதில் காங்கிரஸ் ஆதரவுடன் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி முதல்வரானார். அவருக்கு மொத்தம் 117 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்தது. ஆனால் திடீரென மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகளின் 17 எம்.எல்.ஏக்கள் ஆதரவை விலக்கிக் கொண்டனர். அவர்கள் மும்பைக்கு அழைத்து செல்லப்பட்டு பாஜகவின் கட்டுப்பாட்டில் தங்க வைக்கப்பட்டனர். இவர்களில் 15 பேர் பதவியை ராஜினாமா செய்தனர். சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் 2 பேரும் குமாரசாமிக்கான ஆதரவை விலக்கிக் கொண்டார். இதனால் குமாரசாமிக்கு சட்டசபையில் 101 எம்.எல்.ஏக்கள் ஆதரவுதான் இருந்தது.
ஆட்சியை கைப்பற்றிய பாஜக
113 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்தால்தான் குமாரசாமியால் ஆட்சியில் தொடர முடியும் என்கிற நிலை உருவானது. இதனால் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும் எதிராக 105 வாக்குகளும் பதிவாகின. இதனையடுத்து குமாரசாமி அரசு பதவியை இழந்தது. முன்னதாக 17 அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். பின்னர் 105 எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் பாஜகவின் எடியூரப்பா முதல்வரானார். தற்போது இதே நிலைமைதான் மத்திய பிரதேசத்திலும் உருவாகி உள்ளது.
ம.பி.யில் சட்டசபை பலம்
மத்திய பிரதேச சட்டசபையில் மொத்த எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 230. 2018 சட்டசபை தேர்தலில் 114 இடங்களில் வென்ற காங்கிரஸ் கட்சி, 4 சுயேட்சைகள், 2 பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏக்கள், 1 சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ. ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. மொத்தம் 119 எம்.எல்.ஏக்கள் முதல்வர் கமல்நாத் அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர். தற்போது 20 எம்.எல்.ஏக்கள் கமல்நாத் அரசுக்கு எதிராக ராஜினாமா செய்துள்ளனர். இதனால் ஒட்டுமொத்த சட்டசபையின் பலம் 208 ஆக குறைந்துள்ளது.
ஆட்சியை இழக்கும் கமல்நாத்
இதனடிப்படையில் பெரும்பான்மைக்கு 104 இடங்கள் தேவை. ஆனால் தற்போதைய நிலையில் கமல்நாத் அரசுக்கு 99 எம்.எல்.ஏக்கள் ஆதரவுதான் உள்ளது. இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றால் கமல்நாத் அரசு கவிழ்வது உறுதி. இன்னொரு பக்கம் மத்திய பிரதேச சட்டசபையில் பாஜகவுக்கு 107 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இதனால் கர்நாடகா பாணியில் பாஜக எளிதாக மத்திய பிரதேசத்திலும் ஆட்சி அமைக்கலாம். இது பாஜக வட்டாரங்களில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.