மேற்கு வங்கத்தில் திரிணாமுல்- பாஜக இடையே 'துர்கா பூஜை' யுத்தம்
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தின் கலாசார பண்டிகையான துர்கா பூஜையை கைப்பற்றுவதில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே யுத்தம் நடைபெற்று வருகிறது.
நவராத்திரி திருவிழா அக்டோபர் மாதத்தில் மிக பிரமாண்டமாக மேற்கு வங்கத்தில் கொண்டாடப்படும். ஒவ்வொரு தெருவிலும் அலங்காரமான, பிரமாண்ட பந்தல்கள் அமைக்கப்பட்டிருக்கும்.
ஒவ்வொரு பந்தலும் சோம்நாத் ஆலயம், அங்கோவார்ட் கோவில் என வெவ்வேறு வடிவங்களில் இருக்கும். துர்கையும் வெவ்வேறு வடிவங்களில் வைக்கப்பட்டிருக்கும்.
துர்கா சிலை தயாரிப்பு பகுதி
துர்கை சிலைகளை செய்வதற்கு என்றே ஒரு தனி பகுதி உண்டு. சோனாகட்ச் எனப்படும் பாலியல் தொழிலாளர்களின் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர்தான் துர்கை சிலைகள் தயாரிப்பதற்கான தொடக்க பூஜையில் முதல் மண்ணை எடுத்துக் கொடுப்பது வழக்கம்.
துர்கா பூஜை குழுக்களில் பாஜக
இந்த துர்கா பூஜை நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்துவதற்கு குழுக்கள் அமைக்கப்படும். இக் குழுக்களை தம் வசப்படுத்துவதில் படுதீவிரமாக களமிறங்கியிருக்கிறது பாஜக.
மமதாவுக்கு பதில் அமித்ஷா
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியின் பாரம்பரிய வீடு இருக்கும் பகுதியில் நடைபெறும் நவராத்தி திருவிழாவுக்கான குழுவில் அவரது உறவினர் ஒருவர் தலைவராக இருந்து வந்தார். அதனால் அப்பகுதியில் நவராத்திரி விழாவை மமதா பானர்ஜி தொடங்கி வைப்பார். இம்முறை அந்த குழு பாஜக வசம் சென்றுவிட்டது. அதனால் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா அங்கு நவராத்திரி திருவிழாவை தொடங்கி வைக்கிறார்.
பிம்பத்தை உடைக்க முயற்சி
இப்படி பல இடங்களில் இந்த குழுக்களை தம் வசமாக்குவதில் பாஜக மும்முரமாக இருக்கிறது. ஜெய் ஶ்ரீராம் என்பதற்கு பதிலடியாக ஜெய் காளி என்பது திரிணாமுல் முன்வைக்கும் கோஷம். தற்போது நவராத்திரி குழுக்களை கைப்பற்றி ஜெய் ஶ்ரீராம், ஜெய் காளி எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது என்கிற பிரசாரத்தை முன்னெடுக்க உள்ளது பாஜக. மேலும் இந்தி பேசும் மக்களின் கட்சி என திரிணாமுல் வடிவமைத்துள்ள பிம்பத்தை உடைக்கவும் இது பயன்படும் என்பது பாஜகவின் கணக்கு.