மேற்கு வங்காளத்தில் பாஜக - திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் மோதல்... 4 பேர் உயிரிழப்பு
கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் பாரதிய ஜனதா மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரிடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேற்கு வங்காளம் மாநிலத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அம்மாநிலத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய பின்னடைவை சந்தித்தது. கடந்த தேர்தலில் மேற்கு வங்காளத்தில் 2 தொகுதிகளை மட்டுமே பெற்ற பா.ஜ.க., இந்தத் தேர்தலில் 18 இடங்களை கைப்பற்றியது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, 22 இடங்களை கைப்பற்றியது. இருப்பினும், அம்மாநிலத்தில் தேர்தலுக்கு பின்னர் வெற்றி ஊர்வலங்கள் நடத்த கூடாது என முதலமைச்சர் மம்தா பானர்ஜி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில், தினஜ்பூர் மாவட்டத்துக்குட்பட்ட கங்காராம்பூர் பகுதியில் நேற்று வெற்றி ஊர்வலம் நடத்திய பாஜகவினருக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. மேற்கு வங்காளம் மாநிலத்தின் பாஜக தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலிப் கோஷ் தலைமையில் நடைபெற்ற இந்த ஊர்வலத்துக்கு போலீசார் தடை விதித்திருந்தும் தடையை மீறி ஊர்வலம் நடத்தியதால் மோதல் ஏற்பட்டது.
இதனிடையே, வடக்கு 24 பர்கனஸ் மாவட்டம் சண்தேஷ்காலை பகுதி அருகே உள்ள நயஓட்டில் நேற்று இரவு பா.ஜனதா - திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே திடீரென்று மோதல் ஏற்பட்டது.
கட்சி கொடிகளை அகற்றுவது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் பயங்கர கலவரமாக மாறியது. ஒருவர் மீது ஒருவர் கற்கள் மற்றும் கட்டைகளால் தாக்கிக் கொண்டனர். அப்போது துப்பாக்கிகளாலும் சுட்டுக் கொண்டனர்.
இந்த பயங்கர மோதலில் பா.ஜனதா தொண்டர்கள் சுகாந்தா மோன்டல், பிரதீப், ஷங்கர் ஆகிய 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதே போல், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து அங்கு வன்முறை பரவாமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த மோதல் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் புகார் செய்ய மேற்கு வங்காள மாநில பா.ஜனதா தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதே போல், கொல்கத்தாவில் கடைசிக் கட்ட தேர்தல் பிரச்சாரத்தின் போது, பாஜக தேசியத் தலைவரான அமித்ஷா நடந்திய பிரமாண்ட பேரணியின் போது, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கறுப்புக் கொடிகளை காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, கல்வீச்சு சம்பவமும் நடந்தது. இதில், பலர் காயமடைந்தனர்.
தொண்டர்கள் அங்கும், இங்குமாக சிதறி ஓடியதால், பேரணியில் பரபரப்பு ஏற்பட்டது. சாலையோரத்தில் இருந்த வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதனையடுத்து, கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். இதனால், அந்த பகுதி போர்க்களம் போல் காட்சியளித்தது. இதனையடுத்து, ஒரு நாளுக்கு முன்னதாக, தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது குறிப்பிடத்தக்கது. மேற்கு வங்காளத்தில் பாஜக - திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்களிடையே அடிக்கடி ஏற்பட்டு வரும் மோதலால், சட்டம் , ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக மக்கள் குமுறுகின்றனர்.