தேர்தல் படுத்தும்பாடு..மே.வங்கத்தில் நேதாஜி பிறந்தநாளை கொண்டாடுவதில்,பாஜக-திரிணாமுல் கடும் போட்டி!
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாளை கொண்டாடுவதில் பாஜகவும், திரிணாமுல் காங்கிரசும் போட்டிபோட்டு செயல்படுகிறது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா செல்லும் பிரதமர் நரேந்திர மோடி நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் நேதாஜி தொடர்பான பேரணி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.
மேற்கு வங்க மக்கள் மனதில் இடம்பிடிக்க நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாளை இரு கட்சிகளும் சரியான வாய்ப்பாக எடுத்து கொண்டுள்ளன.
6 மாதங்களில் தேர்தல்
மேற்கு வங்க மாநிலம் மற்றும் அசாமில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அசாமில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அசாமில் ஆட்சியை தக்க வைக்கவும், மேற்கு வங்கத்தில் மீண்டும் ஆட்சியை பிடிப்பதிலும் பாஜக தீவிரமாக உள்ளது.
பிரதமர் மோடி பயணம்
இதனால் இந்த இரு மாநிலங்களிலும் அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் அடிக்கடி பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று அசாம் மற்றும் மேற்கு வங்கம் செல்ல உள்ளார். முதலில் அசாம் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி அங்குள்ள சிவசாகரில் 1.06 லட்சம் நிலப்பட்டாக்களை/ ஒதுக்கீட்டுச் சான்றுகளை பயனாளிகளுக்கு வழங்க உள்ளார்.
நேதாஜி பிறந்தநாள் விழா
இதனை தொடர்ந்து மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா செல்லும் பிரதமர் மோடி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-வது பிறந்தநாளைக் குறிக்கும் பராக்கிரம தினக் கொண்டாட்டத்தில் பிரதமர் உரையாற்றுகிறார். கொல்கத்தா விக்டோரியா நினைவு மண்டபத்தில் 'பராக்கிரம தின' தொடக்க விழாவுக்கு பிரதமர் தலைமை வகிப்பார். நேதாஜி குறித்து நிரந்தர கண்காட்சி மற்றும் படக் காட்சி இந்த விழாவையொட்டி தொடங்கி வைக்கப்படும். நினைவு நாணயம் மற்றும் அஞ்சல் தலையையும் பிரதமர் வெளியிடுவார். ' அம்ர நூதன் ஜௌபோநேரி தூத்' என்னும் நேதாஜி பற்றிய கலை நிகழ்ச்சியும் நடைபெறும்.
பாஜக-திரிணாமுல் போட்டி
இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக, கொல்கத்தா தேசிய நூலகத்துக்கு பிரதமர் சென்று பார்வையிடுவார். '' 21-ம் நூற்றாண்டில் நேதாஜி சுபாஷின் மரபை ஆய்வு செய்தல்'' என்னும் சர்வதேச மாநாட்டுக்கும், கலைஞர்கள் முகாமுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநாட்டில் பங்கேற்பவர்கள் மற்றும் கலைஞர்களுடன் பிரதமர் கலந்துரையாடுவார்.இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாளை கொண்டாடுவதில் மத்திய பாஜகவுக்கும், மேற்கு வங்கத்தின் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் போட்டி ஏற்படுத்துள்ளது.
மக்கள் மனதில் யாருக்கு இடம்?
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாள் நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ள நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். ஷியாம்பஜார் முதல் நகரின் மையப்பகுதியில் உள்ள ரெட் ரோடு வரை 6 கி.மீ. தூரத்திற்கு மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி நடைபெறுகிறது. வடக்கு கொல்கத்தாவில் நடைபெற உள்ள இந்த பேரணியில் வங்காளத்தின் ஒரு வலிமைமிக்க கட்சியாக சித்தரிக்க திரிணாமுல் காங்கிரஸ் முயற்சிக்கிறது. பிரதமர் மோடியும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதன் மூலம் மேற்கு வங்க மக்கள் மனதில் இடத்தை பிடிக்க பாஜக தீவிரமாக உள்ளது. மேற்கு வங்க மக்கள் மனதில் இடம்பிடிக்க நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாளை இரு கட்சிகளும் சரியான வாய்ப்பாக எடுத்து கொண்டுள்ளன.