3 மாநிலங்களில் ஆட்சியை கவிழ்க்க திட்டம்.. பாஜக சதி செய்கிறது.. மமதா பானர்ஜி பரபரப்பு புகார்!
கர்நாடகா உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் பாஜக ஆட்சியை கவிழ்க்க தீவிரமாக செயல்பட்டு வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா: கர்நாடகா உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் பாஜக ஆட்சியை கவிழ்க்க தீவிரமாக செயல்பட்டு வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
1993ல் மேற்கு வங்கதேசத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்த மமதா பானர்ஜி சார்பாக நடத்தப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை போராட்டத்தில் அப்போதைய கம்யூனிஸ்ட் அரசால் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். இதை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வருடம் தோறும் ஜூலை 21 அன்று தியாகிகள் தினமாக அனுசரிக்கிறது.
இதையடுத்து கொல்கத்தாவில் தற்போது தியாகிகள் தினத்தை அடுத்து மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி சார்பாக பெரிய கூட்டம் நடைபெறுகிறது. மக்களை தேர்தலுக்கு பின் மமதா பானர்ஜி சார்பாக நடக்கும் முதல் பெரிய அரசியல் கூட்டம் இதுவாகும்.
என்ன சொன்னார்
இந்த கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி பேசியதாவது, எங்கள் கூட்டத்தில் மக்களை கலந்து கொள்ள விடாமல் பாஜக தடுக்கிறது. மத்திய ரயில்வே துறை இன்று மேற்கு வங்கத்தில் பல ரயில் சேவையை நிறுத்தி உள்ளது. அவர்களால் ரயிலைத்தான் நிறுத்த முடியும். மக்களை அல்ல.
எப்படி கட்சி
எங்கள் கட்சி மாவட்ட அலுவலகங்களுக்கு சென்று பாஜக எங்கள் கட்சி உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்துகிறது. அங்கு வரும் மக்கள் மீதும் பாஜகவினர் தாக்குதல் நடத்துகிறார்கள். நேற்று வாரணாசிக்குள் எங்கள் கட்சியினரை நுழைய பாஜகவினர் அனுமதிக்கவில்லை.
என்ன பணம்
மக்களிடம் இருந்து எப்படி எல்லாம் பணத்தை பிடுங்கலாம் என்று பாஜக திட்டமிட்டுக்கொண்டு இருக்கிறது. அவர்கள் முதலில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். அவர்கள் மக்களிடம் 15 லட்சம் ரூபாய் கொடுப்பதாக வாக்குறுதி அளித்தார்கள். அதை முதலில் இவர்கள் நிறைவேற்ற வேண்டும்.
மிக மோசம்
கர்நாடகாவிலும், கோவாவில், ராஜஸ்தானிலும் ஆட்சியை கவிழ்க்க பாஜக பார்க்கிறது. இதற்காக பாஜக தீவிரமாக சதி வலையை வீசி வருகிறது. மிக மோசமாக குதிரை பேரம் நடத்தி வருகிறார்கள். மக்களின் வாக்கிற்கு அவர்கள் கொஞ்சம் கூட மரியாதை அளிப்பதில்லை. இந்திய ஜனநாயகம், கூட்டாட்சி தத்துவம் பாஜகவால் படுகுழியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது, என்று மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.