குஜராத்தில் தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி.. விளம்பரத்திற்கும், போஸ்டருக்கும் பயன்படுத்திய பாஜக
குஜராத்தில் தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி வெவ்வேறு காரியங்களுக்கு பயன்படுத்தப்பட்டது அம்பலம் ஆகி இருக்கிறது.
அஹமதாபாத்: குஜராத்தில் தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி வெவ்வேறு காரியங்களுக்கு பயன்படுத்தப்பட்டது அம்பலம் ஆகி இருக்கிறது. சென்ற வருட நிதி ஒதுக்கீட்டில் கொடுக்கப்பட்ட பணத்தில் கால்வாசி கூட தலித் மக்களின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்தப்படவில்லை.
சமூக நீதிக்கான கவுன்சில், தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் இந்த முறைகேட்டை அம்பலப்படுத்தி இருக்கிறது. இதில் முக்கால்வாசி பணம் பாஜக கட்சியின் விளம்பரத்திற்கும், ஆவணப்படம் எடுக்கவும், மோடியை வரவேற்கவும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.
குஜராத்தில் தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கும் நிதி எப்படி எல்லாம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என்ற அந்த கவுன்சில் கேட்ட கேள்விக்கு இந்த புள்ளிவிவரங்கள் அனுப்பப்பட்டு இருக்கிறது.
மொத்தம்
குஜராத்தில் இருக்கும் மொத்த மக்கள் தொகையில் 7 சதவிகித மக்கள் பட்டியல் இனத்தவர்கள். 14 சதவிகித மக்கள் பழங்குடியினர். குஜராத் நிதி ஒதுக்கீட்டில் 21 சதவிகிதம் இவர்களின் நலத்திட்டங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்ற விதி இருக்கிறது.
1.86 கோடி ரூபாய்
இதில் 1.86 கோடி ரூபாய் குஜராத்தில் நர்மதா ஆற்றின் நடுவில் கட்ட இருக்கும் ''ஒற்றுமைக்கான சிலை'' செய்ய ஒதுக்கப்பட்டு உள்ளது. மேலும் 4 லட்சம் வத்நகரின் முன்னேற்றம் குறித்து ஆவணப்படும் எடுக்க ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இதுதான் தலித் நிதியில் இருந்து முதலில் எடுக்கப்பட்ட தொகை ஆகும்.
5 கோடி
அதன்பின் குஜராத் குறித்த ஆண்டு புத்தகம் வெளியிட இந்த நிதியில் இருந்து 1.30 கோடி எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த புத்தகத்தை விலைக்கு கூட விற்காமல் இலவசமாக கொடுத்துள்ளனர். மேலும் 5 கோடி ரூபாய் பாஜகவின் சாதனைகளை விளம்பரப்படுத்தும் தொலைக்காட்சி விளம்பரத்திற்கு கொடுத்துள்ளனர்.
1.20 கோடி ரூபாய்
முக்கியமாக இதில் இன்னொரு மோசடியும் நடந்து இருக்கிறது. இந்த முன்னேற்ற திட்டங்கள் எதற்குமே வேறு பணம் பயன்படுத்தப்படவில்லை. 1.20 கோடி கடந்த ஏப்ரலில் குஜராத் வந்த மோடியை வரவேற்க பயன்படுத்தப்பட்டுள்ளது.
3 கோடி நிதி
சுதந்திர தினம் தொடர்பான பாஜக அரசின் விளம்பரத்திற்கு 1.56 கோடி எடுக்கப்பட்டு இருக்கிறது. 1.46 கோடி பாஜகவின் மற்ற தொலைக்காட்சி விளம்பரங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மீதம் இருக்கும் தொகையில் எவ்வளவு தலித் மக்களுக்காக ஒதுக்கப்பட்டு இருக்கிறது என்று கூறப்படவில்லை.