"இந்துத்துவா" கொள்கையை வடகிழக்கில் "ரொம்பவே அடக்கி" வாசித்து முன்னேறும் பாஜக
வடகிழக்கு மாநிலங்களில் இந்துத்துவா கொள்கையை பாஜக மிகவும் அடக்கியே வாசித்து வருகிறது.
Recommended Video
குவஹாத்தி: இந்தியாவின் பிற மாநிலங்களில் இந்துத்துவாவின் பெயரில் புகுந்து விளையாடுவதைக் கைவிட்டு வடகிழக்கு மாநிலங்களில் ரொம்பவே அடக்கி வாசித்து முன்னேறி வருகிறது பாஜக.
வடகிழக்கு மாநிலங்களைத் தவிர மற்ற மாநிலங்களில் இந்துத்துவா கொள்கையின் பெயரால் மாட்டிறைச்சி சாப்பிட கூடாது, காதலர் தினம் கூடாது, மொழி உரிமை பேசக் கூடாது, மாநில சுயாட்சி பேசக் கூடாது என பாஜகவும் இந்துத்துவா அமைப்புகளும் சட்டத்தைக் கையிலெடுத்துக் கொள்கின்றன. இதை மீறினால் தேசதுரோகி, ஆன்டி நேசனல், ஆன்டி இண்டியன் என சகட்டு மேனிக்கு முத்திரை குத்தப்படுவர்.
உச்சகட்டமாக படுகொலைகளும் அரங்கேற்றப்படும். ஆனால் வடகிழக்கு மாநிலங்களின் களநிலவரம் வேறு. மாட்டிறைச்சி அங்கே பிரதான உணவு; கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுபவர்கள் அதிகம். இனக்குழுக்கள் தன்னாட்சி அதிகாரம் கோருவதும் தனி மாநிலம், தனிநாடு கோருவதும் ஆயுதக் குழுக்களாக நடமாடுவதும் யதார்த்தமான அம்சங்களில் ஒன்று. அதேபோல் அஸ்ஸாமில் முஸ்லிம்கள் எண்ணிக்கை கணிசமாக இருக்கிறது.
இந்தியர்களாக கருதுவது இல்லை
பொதுவாகவே வடகிழக்கு மாநில மக்கள் தங்களை இந்தியர்களாக கருதி இன்னமும் பொது நீரோட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பது அடிப்படையான ஒன்று. இந்தியாவை இன்னொரு தேசமாகத்தான் பார்க்கின்றனர். வடகிழக்கு மாநிலங்களில் பயணம் செய்து பாருங்கள்... உங்கள் இந்தியா. நீங்கள் இந்தியர்கள் என்றுதான் பேசுவார்கள். ஊடகங்களும் இந்திய நாட்டை அன்னியப்படுத்தியவர்களாக எழுதும். அவர்களின் பொதுப்புத்தி அப்படியானதுதான்.
இந்துத்துவாவின் மென்மை முகம்
இப்படியாக பாஜகவின் இந்துத்துவா தத்துவத்துக்கு எதிரான நேர் எதிரான அத்தனை அம்சங்களும் வடகிழக்கின் ஏழு மாநிலங்களிலும் விரிந்து பரந்து கிடக்கிறது. இதனால்தான் இந்துத்துவா கொள்கையை முன்வைத்து அங்கே பாஜக எதையுமே சாதிக்க முடியாது என்பதை 2000-ம் ஆண்டுகளின் பின்னர் புரிந்து கொண்டது. இதையடுத்து கட்சிகளை கபளீகரம் செய்வது, வங்கதேசத்தில் இருந்து புலம் பெயர்ந்த இந்துக்களுக்கு குடியுரிமை வழங்குதல், வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றை பேசுகிறவர்களாக தங்களுடைய முகத்தை பாஜக மாற்றிக் கொண்டது.
மோடியின் 3 'டி' பிரசாரம்
அஸ்ஸாம் தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி மூன்று 'டி'க்கள் தான் எங்கள் கொள்கை என பிரகடனம் செய்தார். ஒன்று வளர்ச்சி(டெவலப்மென்ட்), இரண்டு வளர்ச்சி (டெவலப்மென்ட்), மூன்று வளர்ச்சி(டெவலப்மென்ட்) என பேசி போடோ மக்களை கவர்ந்தார். அண்மையில் திரிபுரா தேர்தலிலும் கூட இதேபோல மற்றொரு மூன்று 'டி'யை மோடி முன்வைத்தார். அது டிரேட், டூரிசம் மற்றும் டிரெய்னிங் ஆப் யூத் என்பதுதான். மேகாலயாவின் புல்பாரியில் கடந்த மாதம் பிப்ரவரி 23-ந் தேதியன்று பேசிய பிரதமர் மோடி, ஜாதி, மதத்தின் பெயரில் அரசியல் செய்வதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என அதிரடியாகக் கூறினார்.
மாட்டிறைசியில் மழுப்பும் பாஜக
நாடு முழுவதும் மாட்டிறைச்சிக்கு தடை கோரும் பாஜக, வடகிழக்கு மாநிலங்களுக்குள் நுழைந்தாலே தலைகீழாக பேசத் தொடங்கிவிடும். அதேபோல புலம்பெயர்ந்த வங்கதேச முஸ்லிம்களை மிக கடுமையாக விமர்ச்சிக்கும் பாஜக மறுபக்கம், புலம் பெயர் வங்கதேச இந்துக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவோம் என ஒவ்வொரு எல்லை மாநிலங்களிலும் பாஜக உறுதியளித்து வருகிறது. அஸ்ஸாமில் இதே முழக்கத்தை முன்வைத்த பாஜக, தற்போது நடைபெற்று முடிந்த திரிபுரா தேர்தலிலும் வைத்தது.
கிறிஸ்துவர்களுக்கு எதிரான பேச்சு
மேலும் மோடி அரசின் வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில் ஏராளமான புத்தகங்கள், துண்டு நோட்டீஸுகளை ஒவ்வொரு கிராமமாக பாஜக, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் மக்களிடத்தில் பிரசாரம் செய்தனர். அங்கேபோய் கிறிஸ்துவ மிஷனரிகளின் சதி, பிரிவினைவாத கும்பல் என்றெல்லாம் பாஜக பேசுவதில்லை.
நாய் அரசியல்
இந்தியாவின் பிற மாநிலங்களில் ஒரு தெருநாய்க்கு பிரச்சனை என்றாலே மத்திய அமைச்சர் மேனகா காந்தி துடித்துவிடுவார். ஆனால் வடகிழக்கு மாநிலங்களில் இறைச்சிக்காக நாய்கள் கடத்தப்படுவதும் கொடூரமாக கொல்லப்படுவதும் தொடர் கதை. மாநிலம் விட்டு மாநிலம் போய் நாய்களை கடத்தி வரும் கும்பலும் குற்றங்களும் தொடருகின்றன. நாய்க்கறி இறைச்சிக்கு நாங்கள் தடை விதிப்போம் என்றெல்லாம் மத்திய அரசு பேசுவதில்லை. அப்படி பேசினால் நாய்க்கறியை விரும்பி உண்ணும் நாகாலாந்தில் கால்கூட வைக்க முடியாது என்பது பாஜக தலைவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
ஆன்டி நேசனல்களுடன் கூட்டணி
திரிபுராவில் பாஜகவின் அமோக வெற்றிக்கு பின்னணியில் இருந்த திரிபுரா பூர்வகுடிகள் கட்சியே திரிபுரா தனிநாடு கோரிய கட்சிதான். பழங்குடி மக்களுக்கு தனி நாடு வேண்டும் என கேட்கின்ற கட்சி. பாஜக பார்வையில் ஆன்டி நேசனல், பிரிவினைவாதிதான் அந்த கட்சி. ஆனால் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் கை கோர்த்துக் கொண்டு தேர்தல் பிரசாரம் செய்தது. இருந்தபோதும் கூட கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக இருக்கும் நாகாலாந்திலும் மேகாலயாவிலும் இன்னமும் முட்டி மோதிக் கொண்டுதான் இருக்கிறது பாஜக.
பாஜகவின் இந்துத்துவாவுக்கு வெற்றி அல்ல
நாகாலாந்தில் 8 இடங்களைப் பெற்ற பாஜகவால் மேகாலயாவில் 25 ஆண்டுகளாக அதிகபட்சம் 3 இடங்களைத்தான் பெற முடிந்தது. திரிபுராவில் காங்கிரஸ் கட்சியையே விழுங்கி அந்த கட்சியின் 44 எக்ஸ் எம்.எல்.ஏக்களை வேட்பாளராக நிறுத்தித்தான் வெற்றி பெற்றிருக்கிறது பாஜக. வடகிழக்கு மாநிலங்களில் பாஜக வென்றிருப்பது இந்துத்துவா கொள்கையின் அடிப்படையில் அல்ல. இந்துத்துவாவை பேசாமல் அடக்கி வாசித்ததாலேயே இத்தகைய முன்னேற்றத்தை பாஜக எதிர்கொண்டு வருகிறது என்பதே யதார்த்தம்.