திரிபுராவில் அதிகாரத்தை கைப்பற்ற பிரிவினைவாதிகளுடன் பாஜக கூட்டணி: மாணிக் சர்கார் பகீர்
திரிபுராவில் அதிகாரத்தைக் கைப்பற்ற நாட்டை துண்டாடும் பிரிவினைவாதிகளுடன் பாஜக கூட்டணி வைத்துள்ளதாக மாணிக் சர்கார் சாடியுள்ளார்.
அகர்தலா: திரிபுராவில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற பிரிவினைவாதிகளுடன் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி அமைத்துள்ளதாக அம்மாநில முதல்வர் மாணிக் சர்கார் சாடியுள்ளார்.
60 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட திரிபுராவில் பிப்ரவரி 14-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மார்ச் 3-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
திரிபுராவில் கால்நூற்றாண்டு காலமாக இடதுசாரிகளின் முன்னணி ஆட்சியே இருந்து வருகிறது. இதை முடிவுக்குக் கொண்டு வர காங்கிரஸ், பாஜக தீவிரமாக முயற்சித்து வருகின்றன.
இந்தியாவில் இருந்து திரிபுராவை தனிநாடாக ஆயுதமேந்திய குழுக்களுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. திரிபுராவையே 2 மாநிலங்களாக பிரிக்க கோரும் அமைப்புடனும் பாஜக கூட்டணி வைத்திருக்கிறது.
இதை தமது தேர்தல் பிரசாரத்தில் சுட்டிக்காட்டிய முதல்வர் மாணிக் சர்கார், 1980களில் காங்கிரஸ் கட்சி இதேபோன்ற யுக்தியைத்தான் கையிலெடுத்தது. இப்போது இடதுசாரிகளுக்கு எதிராக பாஜகவும் அதே பாணியில் செயல்படுகிறது.
வங்கதேசத்தில் தீவிரவாத முகாம்களை வைத்துள்ள கட்சிகள், இயக்கங்கள் துணையுடன் திரிபுராவில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற பாஜக முயற்சிக்கிறது. திரிபுராவில் சமூகங்களிடையே மோதலையும் வன்முறையையும் நிகழ்த்த பாஜக முயற்சிக்கிறது என சாடினார்.