பாஜகவில் மூத்த தலைவர்களை ஓரம் கட்டவில்லையாம்! ம.பி. முதல்வர் சவுகான் சொல்கிறார்
பெங்களூர்: பாஜக மூத்த தலைவர்கள் ஓரங்கட்டப்படவில்லை என்று மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்தார்.
மத்திய பிரதேசத்தில் நடைபெற உள்ள முதலீட்டாளர் மாநாட்டுக்கு தொழிலதிபர்களை ஈர்ப்பதற்காக அம்மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் இன்று பெங்களூர் வந்தார். அப்போது நிருபர்களிடம் அவர் பேசுகையில், பெங்களூரிலுள்ள இன்போசிஸ், டிசிஎஸ் சாப்ட்வேர் நிறுவனங்கள், மத்திய பிரதேசத்தில் தொழில் தொடங்க சம்மதம் தெரிவித்துள்ளன.
பாஜகவில் வாஜ்பாய், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்ற மூத்த தலைவர்கள் ஓரங்கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுவதில் உண்மையில்லை. அவர்கள் எப்போதுமே எங்களுக்கு வழிகாட்டியபடியும், அறிவுறுத்தியபடியும் இருப்பார்கள். வாழ்க்கை முழுவதையும் கட்சிக்காக செலவிட்ட அவர்களால்தான் பாஜகவுக்கு இத்தனைபேர் வந்து சேர்ந்துள்ளனர். இதை ஒருபோதும் கட்சி மறக்காது. இவ்வாறு சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்தார்.