மே.வங்கத்தில் அடுத்து பாஜக ஆட்சிதான்.. மமதாவுக்கு அமித்ஷா பகிரங்க எச்சரிக்கை
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் அடுத்தது பாஜக ஆட்சிதான் அமையும் என்பதால் மாநில முதல்வராக இருக்கும் மமதா பானர்ஜி கவனமாக இருக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொல்கத்தாவில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் அமித்ஷா கலந்து கொண்டார். அமித்ஷாவின் கொல்கத்தா வருகைக்கு எதிராக பல்வேறு கட்சிகள், இயக்கங்கள் போராட்டங்கள் நடத்தின.
Go Back Amit Shah என்ற முழக்கம் கொல்கத்தாவின் தெருவெங்கும் ஒலித்தது. அமித்ஷாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வானில் கறுப்பு பலூன்களை அதிரடியாக பறக்கவிட்டனர்.
இத்தனை களேபரங்களுக்கு மத்தியில் கொல்கத்தாவில் சி.ஏ.ஏ. ஆதரவு பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது:
மமதா பானர்ஜி எதிர்க்கட்சி வரிசையில் இருந்த போது அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால் பிரதமர் மோடி, குடியுரிமை சட்ட திருத்தத்தைக் கொண்டு வந்த போது மமதா பானர்ஜி எதிர்க்கிறார்.
குடியுரிமை சட்ட திருத்தத்தை காங்கிரஸும் இடதுசாரிகளும் இணைந்து எதிர்க்கின்றன. மேற்கு வங்கத்தில் ரயில் நிலையங்கள் எரிக்கப்பட்டன. அகதிகளுக்கு குடியுரிமை வழங்க நாங்கள் முயற்சிக்கும் போது ஏன் நீங்கள் எதிர்க்கிறீர்கள்?
கொல்கத்தாவை அதிரவைத்த Go Back Amit Shah கோஷம்! வானில் கொத்து கொத்தாக பறந்த கறுப்பு பலூன்கள்!
மமதாவின் ஆட்சிக் காலத்தில் மேற்கு வங்கத்தில் வளர்ச்சிப் பணிகள் முடங்கி உள்ளன. மமதாவின் ஆட்சிக் காலத்தில் மேற்கு வங்கத்தை சொர்க்கபூமியாக மாற்ற முடியாது. சிறுபான்மையினரின் குடியுரிமையை பறிப்பதற்காக குடியுரிமை சட்ட திருத்தம் கொண்டுவரப்படவில்லை. ஒவ்வொருவருக்கும் குடியுரிமை வழங்குவதற்குதான் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதை மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியால் தடுத்துவிட முடியாது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவை நீக்க வேண்டாமா? நீங்களே பதில் சொல்லுங்கள்.. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அனைத்து தடைகளையும் பிரதமர் மோடி அகற்றிவிட்டார்.
மேற்கு வங்கத்தில் வாரிசு அரசியலை நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். மேற்கு வங்கம் முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டும் எனில் மேற்கு வங்கத்துக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக போராட வேண்டும். லோக்சபா தேர்தலில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் 18 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது. மேற்கு வங்கத்தில் வரும் சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். ஆகையால் மமதா பானர்ஜி கவனமாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அமித்ஷா பேசினார்.