பாஜகவுக்கு டெலிகேட் பொஷிசன்.. நாகாலாந்தில் நாற்காலிக்கு ஆசைப்பட்டால் மணிப்பூரில் ஆட்சி கவிழும்?
நாகாலாந்தில் தேசிய ஜனநாயக முன்னேற்ற கட்சியுடன் கூட்டணி வைத்ததால் மணிப்பூரில் பாஜக ஆட்சியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
Recommended Video
டெல்லி: நாகாலாந்தில் தேசிய ஜனநாயக முன்னேற்ற கட்சியுடன் கூட்டணி வைத்ததால் மணிப்பூரில் நாகாலாந்து மக்கள் முன்னணி, பாஜகவுக்கு அளித்த ஆதரவை வாபஸ் வாங்கினால் அங்கு ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.
நாகாலாந்தில் கடந்த 2013ம் ஆண்டு நாகாலாந்து மக்கள் முன்னணியுடன் பாஜக கூட்டணி வைத்துக் கொண்டு ஆட்சியை பிடித்தது. தற்போது 2018-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலையொட்டி நாகாலாந்து மக்கள் முன்னணியுடனான கூட்டணியை பாஜக முறித்துக் கொண்டது.
இதைத் தொடர்ந்து புதிய கட்சியான தேசிய ஜனநாயக முன்னேற்ற கட்சியுடன் (என்டிபிபி) இணைந்து பாஜக தேர்தலை சந்தித்தது. என்டிபிபியானது நாகாலாந்து மக்கள் முன்னணியில் அதிருப்தியாக இருந்தவர்கள் தொடங்கிய கட்சியாகும்.
பாஜக அரசு
இதனால் தங்களிடம் இருந்து பிரிந்து சென்ற கட்சியுடன் கூட்டணி வைத்தால் மணிப்பூரில் பாஜக அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்வோம் என்று நாகாலாந்து மக்கள் முன்னணியினர் மிரட்டியுள்ளனர்.
ஆட்டம் கண்டுள்ள பாஜக
அதற்கேற்றவாறு இன்றைய நாகாலாந்து தேர்தல் முடிவுகளின்படி நாகாலாந்து மக்கள் முன்னணி கட்சி ஆட்சியை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் மணிப்பூரில் பாஜக அரசு ஆட்டம் கண்டுள்ளது.
தனித்து போட்டி
கடந்த 2017-ஆம் ஆண்டு மணிப்பூரில் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் பாஜக, நாகாலாந்து மக்கள் முன்னணி, என்பிபி, லோக் ஜனசக்தி ஆகியன கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தன. காங்கிரஸ் மட்டும் தனித்து போட்டியிட்டது.
மொத்தம் 30 இடங்கள்
இந்த தேர்தலில் பாஜக 21 இடங்கள், என்பிபி- என்பிஎஃப்- தலா 4 இடங்கள், லோக் ஜனசக்தி- 1 இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த கூட்டணியினர் மொத்தம் 30 இடங்களை பெற்றனர்.
பாஜக பெரும்பான்மை இழக்கும்
ஆனால் தனித்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியோ 28 இடங்களில் வெற்றி பெற்றுவிட்டது. இதனால் மணிப்பூரில் பாஜக ஆட்சி அமைத்தது. தற்போது என்பிஎஃப் மிரட்டிய படி தனது ஆதரவை திரும்ப பெற்றுக் கொண்டால் மொத்த 30 இடங்களில் 4 போய் விட்டால் 26 இடங்களே இருக்கும், இதனால் பாஜக பெரும்பான்மை இழந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆட்சியில் தொடருமா
பாஜக ஆட்சியை இழக்குமா அல்லது மற்ற உதிரி கட்சிகளின் கூட்டணி வைத்து கொண்டு ஆட்சியில் தொடருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.