இன்னும் பல ஆண்டுகளுக்கு பாஜக சக்தி வாய்ந்ததாக கட்சியாகவே நீடிக்கும் - பிரசாந்த் கிஷோர் திட்டவட்டம்
பனாஜி: பிரதமர் மோடி அகற்றப்பட்டுவிட்டாலே பாஜகவின் செல்வாக்கு இல்லாமல் போய்விடும் என்கிற மாயையில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இருப்பதாக தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் சாடியுள்ளார். மேலும் அடுத்த பல பத்தாண்டுகளுக்கு பாரதிய ஜனதா கட்சி செல்வாக்கு மிக்கதாகவே இருக்கும் என்றும் திட்டவட்டமாக கூறியுள்ளார் பிரசாந்த் கிஷோர்.
கோவா மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. 2017-ம் ஆண்டு நடைபெற்ற கோவா சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 17 இடங்களை காங்கிரஸ் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால் 13 இடங்களைப் பெற்ற பாஜக, சிறிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்தது.
காங்கிரஸ் மேலிடத்தின் மெத்தனப் போக்கால்தான் கோவாவில் ஆட்சி அமைக்க முடியாமல் போனதாக விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 4 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி தமது செல்வாக்கை கோவாவில் படிப்படியாக இழந்துவிட்டதாகவே கூறப்படுகிறது.
லக்கிம்பூர் வன்முறை: பிரசாந்த் கிஷோர் பயன்படுத்திய வார்த்தை... ஆடிப்போன காங்கிரஸ் கொடுத்த பதிலடி
காங்-க்கு சிங்கிள் டிஜிட்?
அண்மையில் வெளியிடப்பட்ட அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் தொடர்பான கருத்து கணிப்பு முடிவுகளும் இதனை உறுதிப்படுத்தின. 2022-ம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு அதிகபட்சம் 5 இடங்கள்தான் கிடைக்கும் என்றது அக்கருத்து கணிப்பு. ஆனால் கோவாவில் ஆம் ஆத்மி கட்சிக்கு அதிகபட்சம் 7 இடங்கள் கிடைக்கலாம் எனவும் என்கிறது சிவோட்டர் கருத்து கணிப்பு.
ஆட்சியை பிடிக்க திரிணாமுல் தீவிரம்?
இதனிடையே கோவாவில் காங்கிரஸ் கட்சியை மெல்ல மெல்ல கபளீகரம் செய்து கொண்டிருக்கிறது திரிணாமுல் காங்கிரஸ். கோவா மாநில முன்னாள் முதல்வரும் முதுபெரும் காங்கிரஸ் தலைவருமான லூய்சின்ஹோ பலேரோ அண்மையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதனையடுத்து காங்கிரஸ் நிர்வாகிகள் அடுத்தடுத்து திரிணாமுல் காங்கிரஸுக்கு தாவி வருகின்றனர். இது காங்கிரஸ் தலைவர்களை கதிகலங்க வைக்கிறது. கோவாவிலும் எப்படியாவது ஆட்சியை கைப்பற்றுவது என்பது திரிணாமுல் காங்கிரஸின் வியூகம். இம்மாநிலத்தில் இன்று மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.
ராகுல் காந்தியின் மாயை
மேலும் கோவாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் வியூகம் வகுத்து கொடுக்கும் பணியில் ஐபேக் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் முகாமிட்டு பணியாற்றி வருகிறார். இதனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பெரும் நம்பிக்கையில் உள்ளது. இந்நிலையில் கோவாவில் செய்தியாளர்களிடம் பிரஷாந்த் கிஷோர் கூறியதாவது: பாரதிய ஜனதா கட்சியின் வாக்கு வங்கி 30%. இவ்வளவு வாக்கு வங்கியை வைத்திருக்கும் ஒரு கட்சி அவ்வளவு எளிதாக களத்தில் இருந்து காணாமல் போய்விடாது. பிரதமர் மோடியை தூக்கி எறிந்துவிட்டால் பாஜக செல்வாக்கும் இல்லாமலேயே போகும் என்கிற மாயையில் இருக்கிறார் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. நாடு விடுதலை அடைந்த பின்னர் 40 ஆண்டுகாலம் காங்கிரஸ் எப்படி வெற்றி தோல்விகளுக்கு இடையே பயணித்ததோ அதேபோல்தான் அடுத்த பல பத்தாண்டுகளுக்கு பாஜகவும் நிலைத்தே இருக்கும். அதை அசைத்துவிட முடியாது.
மோடியின் பலம்தான் என்ன?
இதனை நிச்சயம் ராகுல் காந்தி புரிந்து கொள்ள வேண்டும். மோடியை தூக்கிவிட்டால் பாஜகவின் எதிர்காலம் முடியும் என்கிற பொறியில் சிக்கக் கூடாது. முதலில் பிரதமராக உள்ள மோடியின் பலம் என்ன என்பதை அவரை எதிர்ப்பவர்கள் ஆராய வேண்டும். அதுபற்றி யாரும் ஆயராய்வது இல்லை என்பதுதான் இங்கே இருக்கின்றன சிக்கலாகும். அப்படி மோடியின் செல்வாக்கின் பின்னணி என்பதை அறியும்போதுதான் அவருக்கு எதிராக ஒரு வலிமையான தலைவரை முன்னிறுத்தவும் முடியும். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மீது அத்தனை திசைகளிலும் அதிருப்தி இருக்கிறது என்பது யதார்த்தம். ஆனாலும் மோடியின் செல்வாக்கு ஏன் குறையவில்லை என்கிற கேள்விக்கு பதிலும் கிடைக்க வேண்டும்.
செல்வாக்கு இல்லாத காங்கிரஸ்
தேர்தல் களத்தில் மூன்றில் 1 பங்கு வாக்காளர்கள்தான் பாஜகவுக்கு வாக்களிக்கின்றனர். எஞ்சிய 2 பங்கு வாக்காளர்கள் காங்கிரஸுக்கு அப்படியே வாக்களிப்பது இல்லை. இந்த 2 பங்கு வாக்காளர்கள் வாக்குகளை பல அரசியல் கட்சிகள் பங்கிட்டுக் கொள்கின்றன. காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு என்பது இல்லை. காங்கிரஸின் செல்வாக்கு சரிந்து போய்விட்ட ஒன்று. இது தொடர்பாக காங்கிரஸும் பாஜக எதிர்ப்பு அரசியல் கட்சிகளும் சிந்தித்துதான் வியூகம் வகுத்தாக வேண்டும். இவ்வாறு பிரசாந்த் கிஷோர் கூறினார்.