எங்கே போனது மோடி அலை? 4 ஆண்டுகள்...17 லோக்சபா இடைத் தேர்தல்கள்...3 -ல் மட்டுமே வென்ற பாஜக!
மத்தியில் பாஜக ஆட்சியில் அமர்ந்த 4 ஆண்டுகளில் நடைபெற்ற 17 லோக்சபா தேர்தல்களில் 3 இடங்களில்தான் பாஜக வென்றிருக்கிறது.
Recommended Video
டெல்லி: மத்தியில் பாஜக ஆட்சியில் அமர்ந்த பின் நடைபெற்ற 17 லோக்சபா இடைத் தேர்தல்களில் பாஜக 3-ல் மட்டுமே வெற்றியை பெற்றுள்ளது. 2014-ல் வீசியதாக சொல்லப்பட்டு மோடி அலை புஷ்வானமாகிப் போய்விட்டதையே இது வெளிப்படுத்துகிறது.
2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் 282 இடங்களைப் பெற்று தனிப்பெரும்பான்மை பலத்துடன் பாஜக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது. 30 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு கட்சி தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சியை அமைத்தது.
வதோதராவில் பாஜக
ஆட்சியில் அமர்ந்த உடன் 3 லோக்சபா தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை எதிர்கொண்டது பாஜக. பிரதமர் மோடி தாம் போட்டியிட்டு வென்ற வதேரா தொகுதி எம்பி பதவியை ராஜினாமா செய்தார். வாரணாசியை மட்டும் தக்க வைத்துக் கொண்டார். அதேபோல உ.பி.யில் மெயின்புரி எம்.பியாக இருந்த முலாயம்சிங் யாதவ் ராஜினாமா செய்தார். தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவரான சந்திரசேகர ராவ் மேடக் தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இம்மூன்று தொகுதிகளுக்கும் 2014-ம் ஆண்டு இடைத் தேர்தல் நடைபெற்றது. இதில் வதோதராவில் மட்டும் பாஜக வென்றது. மேடக்கை தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியும் மெயின்புரியை சமாஜ்வாடியும் தக்க வைத்துக் கொண்டன.
பாஜக தோல்வி
2015-ம் ஆண்டு தெலுங்கானாவின் வாரங்கல், மத்திய பிரதேசத்தின் ரட்லம் மற்றும் மேற்கு வங்கத்தின் பாங்கோன் லோக்சபா தொகுதிகளுக்கு இடைத் தேர்தல்கள் நடைபெற்றன. வாரங்கல் எம்.பி.யாக இருந்த கடியம் ஸ்ரீஹரி துணை முதல்வரானாதால் பதவியை ராஜினாமா செய்தார். ரட்லத்தில் பாஜக எம்பியாக இருந்த திலீப்சிங் புரியா, பாங்கோன் எம்பியாக இருந்த கபில் கிருஷ்ண தாகூர் ஆகியோர் காலமானதால் இடைத்தேர்தல் நடைபெற்றது. இடைத் தேர்தலில் வாரங்கலை தெலுங்கானா ராஷ்டிரிய சமியும் பாங்கோனை திரிணாமுல் காங்கிரஸும் தக்க வைத்துக் கொண்டன. ரட்லம் தொகுதியை பாஜக, காங்கிரஸிடம் பறிகொடுத்து அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது.
மபி, அஸ்ஸாமில் பாஜக
2016-ம் ஆண்டு மேற்கு வங்கத்தின் தாம்லுக், கூச்பீகார்; மத்திய பிரதேசத்தின் ஷாடோல், அஸ்ஸாமின் லக்மிபூர் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல்கள் நடைபெற்றன. இதில் மேற்கு வங்கத்தின் 2 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸும் ம.பி. அஸ்ஸாம் தொகுதிகளில் பாஜகவும் வென்றன.
குருதாஸ்பூரில் தோல்வி
கடந்த 2017-ம் ஆண்டு பஞ்சாப் குருதாஸ்பூர், ஸ்ரீநகர் லோக்சபா தொகுதிகளுக்கு இடைத் தேர்தல்கள் நடைபெற்றன. குருதாஸ்பூரில் காங்கிரஸும் ஸ்ரீநகரில் தேசிய மாநாட்டு கட்சியும் வெற்றியை ருசித்தன.
இடைத்தேர்தல்களில் பாஜக தோல்வி
இந்த ஆண்டு மேற்கு வங்கத்தின் உலபேரியா, ராஜஸ்தானின் ஆஜ்மீர், ஆல்வார், உத்தரபிரதேசத்தின் கோரக்பூர், புல்பூர், பீகாரின் அரேரியா தொகுதிகள் இடைத்தேர்தலை சந்தித்தன. இதில் கோரக்பூர் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் வென்ற தொகுதி; புல்பூர் உ.பி. துணை முதல்வர் கேசவ்பிரசாத் மவுரியா வென்ற தொகுதி. இத்தேர்தல்களில் ஒன்றில் கூட பாஜக வெல்லவில்லை. கடந்த லோக்சபா தேர்தலில் வென்ற தொகுதிகளைக் கூட பறிகொடுத்தது.
கடந்த 2014-ம் ஆண்டு முதல் மொத்தம் 17 லோக்சபா தொகுதிகளுக்கு இடைத் தேர்தல்கள் நடைபெற்றன. இதில் பாஜக குஜராத்தின் வதோதரா, ம.பி. ஷாடோல், அஸ்ஸாமின் லக்மிபூர் ஆகிய 3 தொகுதிகளில்தான் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.