மோடியின் வதோதரா தொகுதியில் மீண்டும் பாஜக ‘கை’ ஓங்கியது!
அகமதாபாத்: பிரதமர் மோடி ராஜினாமா செய்த வதோதரா தொகுதியில் நடத்தப்பட்ட இடைத் தேர்தலில் மீண்டும் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
லோக்சபா தேர்தலின் போது பாஜக சார்பில் தற்போதைய பிரதமர் மோடி, குஜராத்தின் வதோதரா மற்றும் வாரணாசி ஆகிய இரண்டு தொகுதியில் போட்டியிட்டார். இரண்டிலுமே வெற்றி பெற்றதையடுத்து, வதோதராவில் ராஜினாமா செய்தார் மோடி.
அதனைத் தொடர்ந்து கடந்த 13ம் தேதி வதோதராவில் இடைத் தேர்தல் நடத்தப்பட்டது. அத்தேர்தலில் 45.30 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
பா.ஜ.க. வேட்பாளராக ரஞ்சனாபென் பட் மற்றும் காங்கிரஸ் வேட்பாளராக நரேந்திரா ரவட் போட்டியிட்ட இந்த தொகுதியில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டது. வாக்கு எண்ணிக்கையின் முடிவில் 3.29 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
மொத்தம் பதிவான 7 லட்சத்து 32 ஆயிரத்து 339 ஓட்டில் பாஜக வேட்பாளர் 5 லட்சத்து 26 ஆயிரத்து 763 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 256 ஓட்டுக்கள் பெற்றுள்ளார்.
லோக்சபா தேர்தலின் போது இத்தொகுதியில் மோடி 5 லட்சத்து 70 ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.