தேர்தலில் ஜெயிச்சாச்சு.. ஆனா முதல்வர் செட்டாக மாட்டேங்கறாங்களே?
புதுடெல்லி: நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்றாலும், குஜராத் மற்றும் ஹிமாச்சல் பிரதேச மாநில முதலல்வர் யார்? என்ற கேள்விக்கு தெளிவான பதில் இல்லை. தேசிய தலைவர்கள் சிறப்பான ஒருவரை முதல்வராக தேர்வு செய்ய பாரதிய ஜனதாவின் மத்திய கமிட்டி கேட்டுக்கொண்டுள்ளது.
குஜராத் சட்டசபைக்கு 2 கட்டமாக நடந்த வாக்குப்பதிவுகளின் முடிவு நேற்று வெளியிடப்பட்டன. 22 ஆண்டுகளாக ஆளும் கட்சியாக இருக்கும் பாரதிய ஜனதா கட்சி 99 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. ஆனால் நல்ல முதல்வர் தேர்வில் சவால் நீடிக்கிறது.
குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்த நரேந்திர மோடி, அந்தப் பதவியிலிருந்து விலகி, பிரதமராக போட்டியிட்டார். நரேந்திர மோடி வெற்றிபெற்று ஆட்சியில் அமர்ந்ததிலிருந்து, குஜராத் மாநிலத்திற்கு வலுவான மக்கள் ஆதரவையும் செல்வாக்கையும் பெறும் முதல்வர் ஒருவர் கிடைக்கவில்லை.
மக்கள் ஆதரவைப் பெறவில்லை
மோடி பிரதமாரான பிறகு, ஆனந்தி பென் முதல்வராக்கப்பட்டார். ஆனால், வயதுமூப்பு காரணமாக பதவியிலிருந்துவிலகினார். அவரையடுத்து, விஜய் ரூபானி குஜராத் முதலமைச்சராக்கப்பட்டார். அவரும் நல்ல தலைவராக வலம்வரவில்லை என்றே அக்கட்சியினர் கருதினர்.
குஜராத் சபாநாயகர் தோல்வி
கடும் நெருக்கடியில், மிக குறைந்த வாக்கு இடைவெளியில் விஜய் ரூபானி ராஜ்கோட் தொகுதியில் இருந்து வெற்றிபெற்றுள்ளார். அவரே மீண்டும் முதல்வராக தொடர வாய்ப்பு உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. அடுத்தபடியாக துணை முதல்வர் நிதின் படேல் வெற்றி பெற்றுள்ளார். எனினும் விஜய் ரூபானி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த 5 அமைச்சர்கள் மற்றும் சபாநாயகர் உள்ளிட்டோர் தேர்தலில் தோல்வியைத் தழுவியுள்ளனர்.
முதல்வரை தேர்ந்தெடுக்கும் பணி
குஜராத் நிலைமை இப்படி என்றால் ஹிமாச்சல் பிரதேசத்தில் கடந்த தேர்தலின் போது, பாரதிய ஜனதாவின் முதல்வர் வேட்பாளர் என்று சொல்லப்பட்ட பி.கே துமால் தோல்வியை தழுவியுள்ளார். இதனால் முதல்வரைத் தேர்வு செய்யும் பணியை பாரதிய ஜனதா தீவிரப்படுத்தியுள்ளது.
வெற்றியை கொண்டாட முடியவில்லையே
குஜராத்திலும், ஹிமாச்சலிலும் வெற்றி பெற்றாலும் இந்த வெற்றி பாஜகவிற்கு கொண்டாட்டத்தை தரவில்லை என்ற நிலைமையே நீடிக்கிறது. கடந்த முறை 117 இடங்களில் குஜராத்தில் ஆட்சியை அமைத்த நிலையில் இந்த முறை 99 இடங்களுக்குள்ளாகவே வெற்றி என்பது நின்றுவிட்டது. மற்றொரு புறம் ஹிமாச்சலில் காங்கிரஸ் ஆட்சியை அப்புறப்படுத்தினாலும் திடமான முதல்வர் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பதில் குழப்பம் உள்ளது.
முதல்வர் குறித்து கருத்து கேட்பு
குஜராத் முதல்வரைத்தேர்ந்தெடுக்கும் பணியை மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, கட்சியின் பொது செயலாளர் சரோஜ் பாண்டே மேற்கொள்வார்கள் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெபி நட்டா கூறியுள்ளார். அதேபோல், ஹிமாச்சலுக்கான முதல்வரை மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் சென்று வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்களுடன் கலந்தாலோசனை செய்து அறிக்கை அளிப்பார் என சொல்லப்பட்டுள்ளது.