கோவாவில் ஆட்சியை தக்க வைத்தது பாஜக அரசு.. நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி
கோவா சட்டசபையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜகவுக்கு 22 எம்எல்ஏ-க்கள் ஆதரவு தெரிவித்ததால் மனோகர் பாரிக்கர் அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
பானாஜி:சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுபடி, கோவா சட்டசபையில் இன்று நடைபெற்ற, நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
கோவா மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் கடந்த சனிக்கிழமை வெளியானது. அதில் காங்கிரஸ் கட்சி 17 இடங்களையும், பாஜக 13 இடங்களையும் பெற்றுள்ளன. இதனால் தொங்கு சட்டசபை ஏற்பட்டுள்ளது.
40 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட கோவாவில் ஆட்சி அமைக்க 22 தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே ஒரு கட்சியானது ஆட்சி அமைக்க முடியும். இதனால் அங்குள்ள உதிரிக் கட்சிகளின் ஆதரவை பெற பாஜக முயற்சி செய்து வெற்றி பெற்றது.
ஆளுநர் அழைப்பு
இதைத் தொடர்ந்து கோவா முன்னணிக் கட்சி, மகாராஷ்டிரவாதி கோமாந்தக் கட்சி, சுயேச்சைகள் ஆகியவற்றைச் சேர்ந்த எம்எல்ஏ-க்களின் ஆதரவுக் கடிதத்தை ஆளுநர் மிருதுளா சின்ஹாவிடம் பாஜக அளித்ததன்பேரில் ஆட்சி அமைக்க அழைத்தார். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த 15 நாட்கள் கெடு விதித்தார் ஆளுநர்.
சுப்ரீம் கோர்ட்
அதன்படி கோவா மாநில முதல்வராக மனோகர் பாரிக்கர் நேற்று முன்தினம் பதவியேற்க இருந்த நிலையில் காங்கிரஸ் அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தது. அந்த வழக்கானது அவசர வழக்காக விசாரிக்கப்பட்டது.
முதல்வராக பதவியேற்க தடையில்லை
கோவா சட்டசபையில் 16-ஆம் தேதியே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் முன்னதாக பாஜக அரசின் பதவியேற்புக்கு தடை விதிக்க முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து முதல்வராக மனோகர் பாரிக்கர் செவ்வாய்க்கிழமை பதவியேற்றார்.
நம்பிக்கை வாக்கெடுப்பு
சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி கோவா சட்டசபையில் முதல்வர் மனோகர் பாரிக்கர் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை வாசித்தார். அப்போது அவருக்கு 22 எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்தனர்.
பாரிக்கர் வெற்றி
இதைத் தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பில் மனோகர் பாரிக்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். எனவே சட்டப்படியும் கோவாவில் ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது பாஜக. காங்கிரஸ் கட்சி 17 உறுப்பினர்களை கொண்டிருந்தாலும், ஆட்சிக்கு எதிராக 16 எம்.எல்.ஏக்கள்தான் வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.