போர், பஞ்சத்தில் காலியான கஜானா - 1973 ல் போடப்பட்ட கருப்பு பட்ஜெட்.Flashback
1972ம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான வறட்சி, அதனால் ஏற்பட்ட பற்றாக்குறை, அதனைத் தொடர்ந்து வந்த பஞ்சம் இவை எல்லாம் சேர்ந்து இந்தியப் பொருளாதாரத்தையும் பணவீக்கத்தையும் அதளபாதாளத்திற்கு கொண்டு சென்றது.
டெல்லி: அருண் ஜெட்லி போடும் பட்ஜெட் பற்றி பரபரப்பாக பேசும் இந்த நேரத்தில் 1973-74ம் நிதியாண்டில் அப்போதைய நிதியமைச்சர் யஷ்வந்த்ராவ் சவான் தாக்கல் செய்த கடுமையான பட்ஜெட் பற்றி படிங்க மக்களே!
கடுமையான வறட்சி, பொய்த்துப் போன பருவமழை, பாகிஸ்தானுடன் ஏற்பட்ட போர், இதனைத் தொடர்ந்து வங்க தேச அகதிகளின் வருகை ஆகியவற்றினால் 1973-74ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் இந்திய வரலாற்றில் ஒரு கருப்பு பட்ஜெட் என்றால் மிகையில்லை.
பட்ட காலிலே படும் என்ற பழமொழிக்கு ஏற்ப, 1971ம் ஆண்டு நமது அண்டை நாடான பாகிஸ்தானுடன் ஏற்பட்ட கடுமையான போரின் இறுதியில் இந்தியா வெற்றி பெற்று பங்களாதேஷ் என்ற தனிநாடு உதயமானதும், ஷேக் முஜிபுர் ரஹ்மான் டாட்டா காட்டி விட்டு போய்விட்டார். அதன் பின்னர் நாம் திரும்பிப் பார்த்தால் நம் கஜான காலியாக இருந்தது தெரியவந்தது.
பஞ்சம், பணவீக்கம் அதிகரிப்பு
போர் முடிந்த பின்பு, போர் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் வங்கதேச அகதிகளின் புனர்வாழ்வுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், போதாக் குறைக்கு 1972ம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான வறட்சி, அதனால் ஏற்பட்ட பற்றாக்குறை, அதனைத் தொடர்ந்து வந்த பஞ்சம் இவை எல்லாம் சேர்ந்து இந்தியப் பொருளாதாரத்தை படு பாதாளத்திற்கு கொண்டு சென்றது. பணவீக்கத்தை உச்சத்திற்கு கொண்டு சென்றது.
படுபாதாளத்தில் பொருளாதாரம்
மத்திய அரசால் எதுவும் செய்ய முடியாத நிலைமைதான அப்போது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது காணாமல் போய்விட்டது எனலாம். 1972ம் ஆண்டு ஏப்ரல் முதல் 1973ம் ஆண்டு ஜனவரி மாதம் வரையிலான கால கட்டத்தில் ஒட்டு மொத்த பணவீக்கம் 9.1 சதவிகிமாக படு பாதாளத்திற்கு விழுந்துவிட்டது. அதற்கு முந்தைய ஆண்டின் இதே கால கட்டத்தில் ஒட்டுமொத்த பணவீக்கம் 3.7 சதவிகிமாக இருந்தது. இவை எல்லாம் சேர்ந்து கடுமையான நிதிப் பற்றாக்குறையை அதிகரிக்கச் செய்தது.
நிதியமைச்சர் போட்ட பட்ஜெட்
அப்போது துணைப் பிரதமராகவும் மத்திய நிதி அமைச்சராகவும் இருந்த யஷ்வந்த்ராவ் சவான் கஜானாவை நிரப்புவதற்காக கடுமையான முடிவை எடுக்கத் தூண்டியது. இதனால் வேறு வழியே இல்லாமல் 1973-74ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், தனி நபர் வருமான வரி விதிப்பை கடுமையாக்கினார்.
தனிநபர் ஆண்டு வருமானம்
தனிநபர் ஆண்டு வருமானம் என்பது ஆண்டுக்கு 5000 ரூபாய்க்கு அதிகமானால் 10 சதவிகிமும். 200000 லட்சத்திற்கு அதிகமானால் 85 சதவிகிமும் (தப்பிச்சிட்டோம்டா சாமி, நாம் எல்லாம் அப்ப பொறக்கலே) கூடுதல் உபரி வரியாக 15 சதவிகிமும் விதிக்கப்பட்டது.
அதிரடி திட்டங்கள்
கருப்புத் தங்கம் என்னும் நிலக்கரி, காப்பீடு ஆகியவை எல்லாம் தேசியமயமாக்கப்பட்டன. அதற்கு முன்பு வரையிலும் இவ்விரண்டு துறைகளும் தனியாரிடம் சிக்கி இருந்தது. தேசியமயமாக்கப்பட்டதால் வருவாய் அதிகரிக்கச் செய்தது எனலாம். வறட்சி நிவாரண நடவடிக்கைகளை துரிதப்படுத்தியதுடன், விவசாய உற்பத்தித் திறனையும் மேம்படுத்தியது.
பற்றாக்குறை பட்ஜெட்
பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும் பொது விநியோக முறையை முறைப்படுத்தவும் போதிய நடவடிக்கை மேற்கொள்ள 1973-74ம் ஆண்டு பட்ஜெட்டில் அதிரடி திட்டங்கள் வகுக்கப்பட்டன. இருந்தாலும், பட்ஜெட்டில் 550 கோடி ரூபாய் அளவிற்கு பற்றாக்குறை ஏற்பட்டது.
கடுமையான பட்ஜெட்
மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பின்பு பேசிய நிதி அமைச்சர் சவான், கடுமையான வறட்சி ஏற்பட்டு, பற்றாக்குறை நிலவும் தற்போதைய சூழுலில், எதிர்பாராத செலவினங்களாலும், விவசாய உற்பத்தி குறைந்துவிட்டதால், அதனை அதிகரிக்கச் செய்யவும், வறட்சி நிவாரணத்திற்கும் கூடுதல் நிதி தேவைப்படுவதால், பற்றாக்குறையை குறைக்க வேறு வழி இல்லாததால் என்னால் கடுமையான பட்ஜெட்டை உங்கள் முன் மிகவும் வேதனையுடன் சமர்ப்பிக்கிறேன் என்றார்.
ஏற்றத்தாழ்வுகள்
மேலும் அவர் கூறுகையில், தற்போதைய கடுமையான சூழ்நிலையில் நாம் நம்முடைய செலவினங்களை கட்டுப்படுத்தி உற்பத்தியை அதிகரிக்கச் செய்வோமானால், நீண்ட காலத் தீர்வாக அமையும் என்றும், வேலை வாய்ப்பின்மையால் ஏற்பட்டிருக்கும் ஏற்றத்தாழ்வு குறையும் என்று நான் நம்புகிறேன் என்றும் அவர் தெரிவித்தார். 2018 ஆம் ஆண்டு பட்ஜெட் சமர்பிக்கும் இந்த நேரத்தில் 1973-74ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டை படித்தீர்களா? இது எப்படி இருக்கு மக்களே?